Tuesday, December 12, 2006

சலிப்பு

கனிந்து சுடரும் சூரியன்.

பச்சையம் நிறைத்த மலைப்பரப்பில்
நரம்பாய் நெளியும் பாதைகள்.

மேகம் மயங்கித் தாழப்பறந்து
தூரத்தெரியும் குடிலில்
குழந்தைகள் குரலோசை.

கள்ளம் பயின்ற தென்றல் ஏதும்
அறியாத பிள்ளையாய் உரசிப்போக
வண்ணக்குழைவின் மிடுக்கோடு
நாணிச் சிரிக்கும் பூக்கள்.

என்றும் தனிமையே
தேடிப் பழகிய மனசு
கவிதை கொஞ்சி பேசத் தொடங்க
கேட்க இன்னோர் உயிரின்றி
இன்று புதிதாய் சலிக்கும்.

/12th Dec, 2006

Tuesday, December 5, 2006

வெளிச்சம் தேடும் வேர்கள்

பிறந்த கணத்திலிருந்தே
ஆழமான இருள்வெளியில்
திசை தெரியாத பயணம்.

மண்படிமங்கள் குடைந்து
பாறைகள் மோதி
நம்மை நூறாய் கிழித்துக் கொண்டும்
விதித்த வழியே தொடர்ந்தோம்.

வெறுமை இறுக்கத்தின்
வியர்வை கசகசப்பில்
நாம் முடங்கித் தவித்திருக்க
நம்மின் மறுபாதியோ
வான்முட்டக் கிளைபரப்பி
பூமணத்தின் கிறக்கத்தில்
தென்றலோடு சல்லாபித்திருக்கிறது.

இனி பொறுப்பதில்லை.
ஒன்றுகூடி முட்டிமோதி
பூமிபிளந்து வெளிப்புறப்பட்டன
வேர்கள்.

பேரிரைச்சலோடு
சரிந்து விழுந்தது
மரம்.

/6th Dec, 2006

Thursday, November 30, 2006

தலைமுறை

வாழ்த்துக்கள்.
பூங்காற்றில் தலையசைக்கும் பூக்களெல்லாம்
புயற்காற்றில் வேரழியும் விபரமேதும் அறியாமல்
என் கவசங்களைக் கொடுத்துவிட்டு
கைமுறுக்கு வாங்கிக் கொறித்தபடியே
இராட்டினம் பார்த்துக் கிறுகிறுத்து
நிராயுதபாணியாய் நின்றிருந்த என்னை
சரிவுகளின் கீழே இருண்ட பள்ளத்தில்
ஆக்ரோஷமாய் வீழ்த்திக்கொண்டமைக்கு
வாழ்த்துக்கள்.

என்மீது கவிழ்ந்துவிட்ட இருள்வெள்ளம்
கண்ணீர் கசிந்த வழியே
உள்ளேயும் புகுந்து நிறைக்க
அருவருத்து கூனி குறுகி சிறுத்து
மூச்சுத்திணறி மூழ்கத்தொடங்கி
முழுமையாய் மரணித்தாலும்
கரையொதுங்கிய என் சவத்தை
தோளில் சுமந்தபடியே நான் எழுந்து நின்றது
நாக்குச்சவுக்கை சொடுக்கிக்கொண்டே
எங்கிருந்தோ நீ கொக்கரிக்கும் ஓசையில் தான்.

என் ஆற்றாமையின் கேவல்கள் அடங்கி
உள்ளெரியும் தீயில் விழிகளுக்கு ஒளியூட்டி
புலன்களெல்லாம் கூர்மையாக்கி
சலனங்களின் ஆணிவேர் அறுத்து
வெளிப்பூச்சின் பின்நெளியும் புழுக்கள் கண்டறிந்து
கவனமாய் இரண்டடிகள் நான் எடுத்து வைக்க -
உன் திகைப்பை மறைத்துக் கொண்டு
என் உடலெங்கும் அப்பிக்கிடக்கும் தழும்புகளையும்
காய்த்துப்போன என் கைகளையும்
விகாரம் எனச்சொல்லி மகிழ்கிறாய்.

நன்று, இன்னும் சற்றுப்பொறு.
என் பரிபூர்ணத்தின் ஒளிப்பிழம்பில்
உதித்து வரும் தலைமுறை
வாள் உருவும் ஓசையில்
உன்னதுதன் பின்னங்கால் பிடரிபட
தெறித்து ஓடக் காண்பாய்.

/30th Nov, 2006.

Saturday, November 11, 2006

விசும்பல்

என் நரம்புகளின் முடிச்சிலிருந்து
விண்ணென்று தெறித்துப் புறப்பட்டு
வீரியம் குறையாமல்
நெடும்பாதை பயணப்பட்டு
மூளைச்சிக்கல்களில் அமைதியாய் ஊடுருவி
சற்றும் எதிர்பாராமல்
துல்லியமான ஓர் அதிர்வுக்கோளத்தை
நாற்புறமும் வெடித்துப் பரவ விட்டு
உறைந்திருந்த பக்கங்களில்
அடர்மின்னலை சீறிப்பாய்ந்து
சிலிர்த்தெழுந்த உணர்வுகள் தறிகெட்டோடி
வார்த்தைச்சுரங்கத்து இருட்டில்
தேடித் துழாவி ஏதும் கிடைக்காமல்
அத்தனை அவஸ்தைகளும்
மெல்லிய விசும்பலாய் வெளிப்பட்டு
மரணித்து அமைதியானபின்
மற்றொன்று...

/11th Nov, 2006

Friday, November 10, 2006

Between Night and Morn

Another favourite from Khalil Gibran's "Between Night and Morn".

Be silent, my heart, until Dawn comes;
Be silent, for the ranging tempest is ridiculing
Your inner whispering, and the caves of
The valleys do not echo the vibration of
Your strings.
~
Be silent, my heart, until Morn comes;
For he who awaits patiently the coming
Of Dawn will be embraced longingly by
Morningtide.
~
Dawn is breaking. Speak if you are able,
My heart. Here is the procession of
Morningtide.... Why do you not speak?
Has not the silence of the night left
A son in your inner depths with which
You may meet Dawn?
~
Here are the swarms of doves and the
Nightingales moving in the far portion
Of the valley. Are you capable of flying
With the birds, Or has the horrible night
Weakened your wings?
~
The shepherds are leading the sheep
From their folds; Has the phantom of the night
Left strength in you so you may walk behind them
To the green prairies?
~
The young men and women are walking
Gracefully toward the vineyards.
Will you be able to stand and walk with them?
~
Rise, my heart, and walk with
Dawn, for the night has vanished with
Its black dreams and ghastly thoughts and
Insane travels.
~
Rise, my heart, and raise your voice with
Music, for he who shares not Dawn with
His songs is one of the sons of ever-
Darkness.
================
This reminds me that life isn't about getting stuck in anything; it's about gathering all the strength it takes to move on, no matter how hard the journey is. Thanks Mr.K.G.

Thursday, November 9, 2006

Good old days !!


Drawing has also been my passion in my school days. I am not good at water-coloring my drawings. So from past experience, I always prefer to stay with black & white pencil drawing. What remains of my drawing ventures is this sketch, made in 1999. Those College days!! I should thank my good friend for having recovered this sketch, in e-format. Athu Oru Azhagiya Kanaa Kaalam !!

Nowadays this passion has come down to merely spending few minutes glancing through Art books in Higginbothams.

Tuesday, November 7, 2006

The "too" factor

I recently bought omnibus edition of "The greatest works of Kahlil Gibran". He had a message for me in his "The Wanderer - His Parables and His Sayings". The message was in a parable titled "Body and Soul" that seriously made me think about the "ground reality". Read it first:
==========
Body and Soul
==========
A man and a woman sat by a window that opened upon Spring. They sat close one unto the other. And the woman said,"I love you. You are handsome, and you are rich, and you are always well-attired".

And the man said,"I love you. You are a beautiful thought, a thing too apart to hold in the hand, and a song in my dreaming".

But the woman turned from him in anger, and she said,"Sir, please leave me now. I am not a thought, and I am not a thing that passes in your dreams. I am a woman. I would have you desire me, a wife, and the mother of unborn children".

And they parted.

The man was saying in his heart,"Behold another dream is even now turned into the mist".

And the woman was saying,"Well, what of a man who turns me into a mist and a dream?".
============================================

So, too much of anything is good for nothing. Be it too soft or too rough, too rich or too poor, too good or too bad, any form of "extremism" is not the best way to live your life. There should exist a balance - knowing exactly where to draw the line, where to stop - and those who reach this balance live a better life. I like this concept. Should learn to practise :)

Monday, November 6, 2006

குறை

கறுத்த மேகம் அனுப்பி வைத்த
தூய மழைத்துளிகளை
அழுக்குப் பாத்திரத்தில் ஏந்திவிட்டு
'அப்பனுக்கு பிள்ளை தப்பாமல்' என
அலுத்துக் கொள்வதேன்
மேகத்தை.

/6th Nov, 2006

Saturday, November 4, 2006

எ.பி.சு.ரா.க - 4

=============================
கதவைச் சுண்டாதே தயவுசெய்து
=============================
நான் இங்கு இருக்கிறேன்.
இங்கு இச்சிறிய அறையில்.
சிறிய சன்னல் சிறிது வெளிச்சம்.

தயவுசெய்து உன் ஆள்காட்டி விரலின் நகத்தால்
சாத்தியிருக்கும் என் கதவைச் சுண்டாதே
எனக்கு உன் ஓசைகள் தெரியும்
உன்னைத் தெரியும்
உன்னிடம் எவ்வளவு என்பதும் தெரியும்.

என்ன உறக்கம் இன்னும் என்பாய்
தொழில் வரியைக் கட்டக் கடைசி நாள் கேட்பாய்
பங்குகள் சரிவதுபற்றி விசனமுடன் பேசுவாய்
தொலைபேசி எண் என்ன என்பாய்

கையாலாகாதவன் என என்னைச் சொல்லாமற் சொல்லி
குற்ற உணர்ச்சியை ஒரு பெரும்பாரம்

சரித்துவிட்டுப் போவாய்
"ஒரே ஒரு கவிதை"
போதும் இந்த ஜென்மம் பொருள்பட

என்பது என் நம்பிக்கை
அதை எழுதிவிடக் காத்துக்கொண்டிருக்கிறேன்
உன் ஆள்காட்டி விரலின் நகத்தால்

என் கதவைச் சுண்டாதே
தயவுசெய்து.

- சுந்தர ராமசாமி 1985


பிரமிக்க வைக்கும் தூய்மையான உறுதியான நம்பிக்கை. இந்த கவிதையை சு.ரா. எழுதிய போது அவருக்கு வயது 54 இருக்கும். 27 வயதில் இப்படியெல்லாம் நான் கவிதையில் நம்பிக்கை வைத்தால் என் வீட்டில் தலையில் குட்ட வருவார்கள் :)) so இந்த கவிதை தரும் செய்தியை let me generalise - "have passion for your work, no matter what".

மனத்தளத்தில் சில குறிப்புகள்

உங்களை கறைப்படுத்தும்
அழுக்குகள் இங்கு இல்லை.
உங்கள் காலணிகளை கழற்றி விடலாம்
நீங்கள் விரும்பினால்.

என் காயங்களின் பரிமாணங்கள்
இங்கு காட்சிக்கு இல்லை.
உங்கள் தேவைக்கு வாசிக்க
அதன் பாடங்கள் மட்டுமே
தரப்பட்டிருக்கின்றன.

உங்கள் கணிப்பில் என் குற்றங்களை
முகம் பார்த்துச் சொல்லுங்கள்.
இல்லாமற் போனால்
நம்மால் திருத்த இயலாது
என் பிழைகளையோ
உங்கள் பிழைகளையோ.

ஆர்ப்பரிக்கும் உங்கள் படோடாபங்கள்
இன்னும் சற்று தள்ளியே நிற்கட்டும்.
இங்கு நான் கேட்க விழைவது
உங்கள் ஆழ்மனத்தில் ஓடும்
தெள்ளிய நீரின் ஓசையை.

சிரம் தாழ்த்தி துதிபாடி
நீங்கள் பூரிக்கும் வரை பூச்சொரியும்
வசதிகள் இங்கு இல்லை.
ஆத்மார்த்தமான அன்பிற்கு
சத்தமில்லாமல்
பூவொன்று இங்கே பூத்து
உங்கள் முகம் பார்த்து நின்றிருக்கும்.

மூச்சுத்திணற இறுகப் பிணைத்து
முடிந்த மட்டும் சுரண்டிப் பார்க்க
உறவுக்கயிறுகள் திரிப்பதில்லை.
உங்கள் பெயரை இங்கே எழுதி விட்டு
வானம் பறந்து வாருங்கள்.

என் மனத்தளம் வந்தடையும் பாதைகள்
வெறிச்சோடிக் கிடக்க,
காத்திருக்கிறேன்.

/4th Nov, 2006

Wednesday, October 25, 2006

தேங்கிக் கிடப்பவை

மலர்ந்த தருணம் எதுவென்று அறியவில்லை
அத்தனை இதழ்களிலும் தெளிவான அழகு
வலிக்குமோ என்றபடி தயங்கித்திரளும் பனித்துளி
சுற்றிலும் அமைதியோடிழைந்த நறுமணம்
அப்படித்தான் உணர்ந்ததாய் ஞாபகம்
என் நினைவறையில் முதன்முதலாய்
சேர்த்து வைத்த உன் பிம்பத்தை.

சில பரிட்சயங்கள் கடந்து
என்னில் தன் ஆளுமை உறுதியானபின்
அவ்வப்போது உன் பிம்பம்
இறுகிக் கனத்து சுதாரித்து இயல்பானதில்
எழுந்த என் தத்தளிப்பை
சிரித்து மழுப்பி பழகிக்கொண்டேன்.

காலச்சூட்டில் மயக்கங்கள் விலகி
விழுந்த வெளிச்சத்தில்
உன் பிம்பத்தின் விகாரம் ஓங்கி வளர
பற்றிக்கிடந்த என் நினைவுகள்
மூர்ச்சையடைந்து விழுந்தன.

காணக்கிடைக்காமல்
உன் பிம்பம் கலைந்துபோய்
காலம் வெகுவாகிப் போனாலும்
என் நினைவறையில்
இன்றும் தேங்கிக் கிடக்கின்றன -

அந்த இதழ்களின் நறுமணமும்
நீ சொறுகிய வார்த்தையில்
சொட்டும் என் இரத்தமும்.

/25 Oct, 2006

Sunday, October 8, 2006

கவிப்பயன்

இதனால் அறியப்படுவது யாதெனின்
இன்றைய தேதியில் கவிதைகளால்
வேறொன்றும் பயனில்லை.

தன் அதிமேதாவித்தனத்தை
பிரகடனம் செய்து
எழுதும் ஒவ்வொரு எழுத்தையும்
காகிதப்பணமாய் பண்டமாற்றும் வித்தை
கைவரப் பெற்று
பக்கம் நான்கு வரிகள் நிறைத்து
புத்தகம் பத்து வெளியிட்டு
மொழியைப் பிழிந்தெடுத்து
பட்டங்கள் சூடிக் கொண்டு
காதலர்கூட்டத்தின் கரகோஷம் பெற்று
அதில் கயல்விழிப் பெண்ணொருத்தி
கையொப்பம் கேட்காமற் போனால்

இன்றைய தேதியில் கவிதைகளால்
வேறொன்றும் பயனில்லை.

இந்த சப்தங்கள் எட்டாத தூரத்தில்
மனத்தின் இருட்டறையில் காயங்கள் சுமந்து
சுருண்டு கிடந்தவனை
பாந்தமாய் தொட்டெழுப்பி
சன்னலொன்றைத் திறந்து வைத்து
வானமாய் விரிந்து கிடந்தது
ஒரு கவிதை.

/8th Oct, 2006

அவர்கள்

சிகரம் ஏறி சிறகு விரித்து
உயரப்பறந்து வானுயரப்பறந்து
மேகம் கடந்து மேனி சிலிர்த்து
கண்கள் மூடி உள்ளம் விழிக்க
பாவம் இது பசிமயக்கம் எனச்சொல்லி
தெருவோரம் சீட்டெழுதித் தந்தார்கள்.
கூழுக்கு வரிசை கட்டி
கும்பிடச் சொன்னார்கள்.

வேண்டாத ரோமங்கள் எனக்காட்டி
என் சிறகுகளைச் சிரித்தார்கள்.

எண்ணங்கள் செதுக்கியொரு சிலைவடிக்க
எத்தனைக்கு விலைபோகும்
என்று மட்டும் கேட்டார்கள்.

சின்னச்சறுக்கல்களில் உணர்வுகள்
சிராய்த்து நோகும் போது
உள்ளம் பகிர்ந்து கொள்ள ஓர்
உறவுக்கரம் தேட
புண்ணியம் சேர்க்க வழியாச்சு
எங்கே உன் பிச்சைப்பாத்திரம் என்றார்கள்.

எத்தனை முயன்றாலும்
சொல்லிப் புரிவதில்லை என்பதால்
புன்னகைத்து அவர்களைக் கடக்கின்றேன்.
பசிமயக்கம் போய் இப்போது பார்
தின்ற கொழுப்பு என்கிறார்கள்.

/8th Oct, 2006

Wednesday, October 4, 2006

என்னை அறிவீரா?

மழலை வாய்மொழிக் குழறலாய்
சிதறிக் கிடப்பேன் -
அள்ளிக் கோர்த்தெடுத்து எந்தன்
அர்த்தம் படிக்கத் தெரியுமா ?

காற்றாடும் காய்ந்த இலைப்பரப்பில்
பச்சைய மிச்சமாய் ஒட்டிக்கிடப்பேன் -
என் வண்ணம் அறியும்
வகை அறிவீரா ?

உண்ர்வோடு ஒட்டாத சப்த இரைச்சலில்
அறுபட்ட மெளனம் ஒன்று
அலறித் துடித்து இறக்கையில்
திறக்கின்ற செவிகள் உண்டா ?

மரத்தாயின் மடிமண்ணில்
மடிந்திருக்கும் பூமக்கள்
சடலம் அள்ளும் காற்றோடு மன்றாடும்
அவள் வேதனைக்குத் தோழைமையாய்
நின்றிருப்பேன் - என்னை அறிவீரா ?

/2001

Saturday, September 30, 2006

ஒர் விடுமுறை நாளில்

நாளை ஒருநாள் விடுமுறை
இன்று புதிதாய் பிறந்தோம்
உற்சாகமாய் ஓடி வா நண்பனே !

கடிகாரத்தின் இடியோசை
தடிகொண்டென்னை எழுப்ப
அவசரமாய் எழுந்து
அவசரமாய் வாழ்ந்து
அவசரமாய் சாக
என்க்குச் சம்மதமில்லை

சென்று விடலாம் நண்பனே
வாகனப்புகைச்சலில் இருந்து
விஞ்ஞான இரைச்சலில் இருந்து
எங்கே வயல் எங்கே நதி
எங்கே மலை - அங்கேயே
சென்று விடுவோம்

அதோ அந்த நதி
பாறையின் காதுகளில்
ஏதோ கிசுகிசுக்கிறதே -
என்னவென்று கண்டறிவோம் வா !

மரம் விட்டு மரம் தாவி
நலம் விசாரிக்கும்
குரங்குகளோடு குதிதாடுவோம் வா !

அந்த அணில்களின்
ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வோம்
ஆறுதல் பரிசு மட்டும்
கிடைத்தாலும் ஆனந்தமே !

அந்த தாய்பறவை தன் குஞ்சுகளுக்கு
பறக்க கற்றுத்தருவதை பார் -
பறவைகளோடு பறந்து திரிய
பறவைகளிடமே பாடம் படிப்போம் வா !

அங்கு பார்த்தாயா
அந்த இலை காற்றில்
அசைந்து அ..சை..ந்..து
ஏதோ எழுதுகிறதே
என்னவென்று கண்டறிவோம் வா !

அதற்குள் முடிந்து விட்டதா நண்பனே..
வைகறை காலை நண்பகல் எற்பாடு எல்லாம் ?
பரவாயில்லை
பாக்கி இரவு பத்திரமாய் இருக்கிறது
நிலவைத் தலையணையாக்கி
நட்சத்திரங்களைப் போர்வையாக்கி
தென்றலை வெண்சாமரம் வீசச் செய்து
முதலில் ஒரு முயல்குட்டியை
தூங்க வைப்போம் - பின் அதன் காலடியில்
கண் துயில்வோம்.
கனவிலும் வலம் வரட்டும்
நம் விடுமுறை சொர்க்கத்தின் வாசனை.

நாளை முதல் மீண்டும் நாம்
எந்திர எச்சங்கள்.

/1997

Monday, September 25, 2006

தேன் துளிகள்

தவழ்ந்து எழுந்து நடந்து
செப்புச்சட்டி விளையாடி
பெயர் வகுப்பு சொல்லப் பழகி
படம் பார்த்து கதை சொல்லி
மிட்டாய், ஊசிக்கு மட்டும் அழுது
கண்கள் விரிய விரிய உலகம் வியந்து
நிறைந்திருந்தயென் பிள்ளைப்பிராயத்து
வெள்ளைத்தாளில் பின்னொரு நாள் -

நகங்கள் கிழித்து வழிந்த இரத்தத்தில்
சிந்திய கண்ணீர் சேர்த்துக் குழைத்து
வார்த்தைத்தீயில் துடித்த வலியில்
வாழ்க்கைப்பாடம் எழுதி எழுதி -

இதழ்களெல்லாம் இரும்பாகிப் போன
மலர்மனதில் - என்றேனும்
குளிர்சாரலோடு தென்றல் வீச
இன்னும் சுரக்கின்றன
சில தேன் துளிகள்.

/25 Sep, 2006

Saturday, September 23, 2006

எ.பி.சு.ரா.க - 3

இன்னொரு சு.ரா. கவிதை.

==============
கடல் சிரித்தது
==============
கல்லும் பிராணன் இழுத்து
மேலெழுந்து பறந்தது.

அலைகள் பாதம் முளைத்துக்
கரையேறி வந்தன.

திசுக்கள் பரிணமித்து
வேதங்கள் கோஷித்தனர்.

மூளைச் சுடரின் அங்குசம்பட்டு
பிளிறி எழுந்தன யானைகள்.

மின்னலும் மழையும்
பின்பக்கம் நின்றன.

அத்தனையும் முடிந்து
ஒரு விசும்பல் எழுந்தது.

ஏன் என்றது வானம்.
நான் யார் என்று கேட்டது
மண்ணில் ஒரு குரல்.
கடல் சிரித்தது.

- சுந்தர ராமசாமி 1975

Sunday, September 17, 2006

கண்டேன்

கரடுமுரடாய் நானிருப்பேன் -
மென்மையைக் கற்றுத் தரும்
பூக்கள் வேண்டும்.

சினத்தால் கொஞ்சம் சீறுவேன் -
கனிவைக் கற்றுத் தரும்
தென்றல் வேண்டும்.

கண்கள் கொஞ்சம் கரைந்திருப்பேன் -
எனை சிரிக்கச் சொல்லும்
பிள்ளைமுகம் வேண்டும்.

வெறும் கல்லாய் கூட நானிருப்பேன் -
என் ஈரம் அறியும்
வேர் வேண்டும்.

இடைவந்த இடரால் வீழ்ந்திருப்பேன் -
எனை பறக்கச் சொல்லும்
சிறகுகள் வேண்டும்.

புயலாய் ஓடிக் களைத்திருப்பேன் -
பூங்குயில் பாடும்
மெல்லிசை வேண்டும்.

இடிபட்டு இதயம் கிழிந்திருப்பேன் -
இதமாய் வருடும்
பூவிதழ் வேண்டும்.

சிந்தை தெளிந்திருந்தும் சரிந்திருப்பேன் -
சுட்டெரித்து உணர்த்தும்
சூரியன் வேண்டும்.

கண்கள் மூடிக் கனவினில் இருப்பேன் -
நிகழ்கால நிமிடச் சத்தம்
நித்தமும் வேண்டும்.

சந்தோஷத்தில் சற்றே சத்தமாய் சிரிப்பேன் -
என் கைகோர்தாடும்
கார்மேகம் வேண்டும்.

முதிர்வினில் தளர்நடையிட்டே செல்வேன் -
என் பாதம் அறியும்
பாதை வேண்டும்.

முடிவினில் மண்சுவைக்க முடிந்திருப்பேன் -
என்மேல் பனித்துளி வார்க்கும்
பூக்கூட்டம் வேண்டும்.

நான்முகனே நான்முகனே
நான்கு திசை நாயகனே
நாலிரண்டு செவியாலும்
நல்லபடி கேட்டாயா ?
வேண்டியதைச் சொல்லிவிட்டேன்
சொன்னபடி தருவாயா ?
கேட்டேன் -
கேட்டதைத் தந்தான்.
தந்ததைக் கண்டேன்.
பெண்.

/1998

Saturday, September 16, 2006

தேடல்

நான் வாழும் தெருவின் மூலைமுடுக்கெல்லாம்
எங்கும் நீக்கமற நிறைந்து கிடக்கின்றன
அதரப்பழசுமாய் புதுச்சாயம் பூசிக்கொண்டதுமாய்
பலப்பல அடையாளங்கள்.

வசீகரிக்கும் அந்த அடையாளங்களின் பின்னே
முண்டியடித்துப் பலரும் ஒளிந்து கொள்ள
சேர்ந்த ஆள்பலத்தில் மிகுந்த இறுமாப்போடு
அவை மார்தட்டிக் கொள்ளும் ஓசையில்
எங்கள் தெருவே அதிர்ந்தது.

"எல்லாம் சரி தான் ஐயா - உங்கள்
அர்த்தம் எங்கே - அதன்
ஆழம் எங்கே - அங்கு சுரக்கும்
அமைதி எங்கே - அதில் பிறக்கும்
அழகு எங்கே?" - எனக்கேட்டதும்
வழிந்த சாயத்தை துடைத்துக் கொண்டு
முகம் சுளித்த அந்த அடையாளங்கள்
கோபம் கொண்டு கோரைப்பல் காட்டி
எனை விரட்டியடித்தன.

இப்போதெல்லாம் கவனமாய் தேடுகிறேன் -
உள்ளே கோரைப்பல் இல்லாத அடையாளங்களையும்,
அடையாளம் கூட வேண்டாத
கம்பீரமான அர்த்தங்களையும்.

/16 Sep, 2006

Monday, September 4, 2006

எ.பி.சு.ரா.க - 2

எனக்குப் பிடித்த சுந்தர ராமசாமி கவிதைகளுள் அடுத்தது -
நம்பிக்கை பற்றி ஒரு simple and straight forward kavidhai.

=========
நம்பிக்கை
=========
தூரத்தொலைவில் அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.

வேறு யாரோ.

அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.

Saturday, September 2, 2006

முட்பூக்கள்

- 1 -

அவன் என்னை கவனித்தான்.

மானிடத்தூசு தட்டி
புவி வீட்டைப் புதுப்பித்தேன்
பூத்திட்ட பூங்காடாய்
அதையெங்கும் நிறைத்திட்டேன்
நிறைத்திட்ட இடமெல்லாம்
நிறைந்து நிற்கும் -
என் ஆசைகள்.

பூக்களே பூக்களே
நீங்களாய் நானிருப்பேன்

உம்மோடு விளையாடும்
பூங்காற்றாய் தலையசைப்பேன்
உள்ளுக்குள் உயிரோடு
வாசமாய் வசித்திருப்பேன்
நாணித் தலைகுனியும்
இதழ்களாய் சிவந்திருப்பேன்
வியர்வையாய் உருண்டோடும்
பனித்துளியாய் குளிர்ந்திருப்பேன்
சிதைகின்ற நனைகின்ற
வேர்களாய் மணத்திருப்பேன்

பூக்களே பூக்களே
நீங்களாய் நானிருப்பேன்

இதழங்கம் நோகாமல்
அழகொன்றும் நோகாமல்
பூவண்ணம் கோர்த்தெடுத்து
புதுச்சிறகு செய்து கொண்டேன்
என்னோடு கட்டிக் கொண்டேன்

என் சிறகுகள் படபடக்கும்
ஓசையில் விழித்துக்கொண்ட வானம்
தன் நீள அகலங்களை
தோல்விப்பார்வை பார்க்க
விரிகின்றேன் நான்
விரிகின்ற திசையெல்லாம்
விரிந்து நிற்கும் -
என் ஆசைகள்.

அவன் என்னை கவனித்தான்.


- 2 -

புதுவானில் பூச்சிறகோடு
உயரப்பறந்திட்டேன் நான்.
அவன் தனக்கான
வேளை வந்து போல்
வேகமாய் இயங்க ஆரம்பிக்க
மறுகணம் -

துளித்துளியாய் என் மீது
ஏதேதோ தெறித்து விழ -
என்ன இது என்ன இது
சிறகுகள் வேர்க்குமா?
வேர்க்கிறதே..

சுமையாக என்மீது
ஏதேதொ வந்தழுத்த -
என்ன இது என்ன இது
பூக்கள் கனக்குமா ?
கனக்கிறதே..

தாழப்பறந்து
மொத்தமும் கிறுகிறுத்து
சிறகுகள் கிழிபட
முட்காட்டில் விழுந்திட்டேன்.

காண்கின்ற காட்சியாக
காய்ந்திருக்கும் முட்கள்
மெல்ல என் விழிகளுக்குள் ஊடுருவ
தாளாமல் இமை மூடுகின்றேன்.

நெஞ்சத்தின் ஆழத்தில்
உயிர்த்திருந்த பூக்கள்
மெல்ல மேலெழுந்து
என் விழிகளுக்குள் உறுத்த
தாளாமல் இமை திறக்கின்றேன்.

உள்ளிருந்தும் வெளியிருந்தும்
உயிர் வதைக்கும் வலிகளே
படைத்தும்மை அனுப்பி வைத்து
இரசித்திருக்கும் மூடன் யார் ?

தேடுகிறேன் தேடுகிறேன்
முகங்காட்டா எதிரியவன்
முழுவுருவம் தேடுகிறேன்
தேடித் தொலைந்த போது
தோற்றது தெரிந்தது.

தன் வேலை முடிந்ததென
அவன் சிரித்துக் கொண்டான்.


- 3 -

என் பூக்களெல்லாம்
முட்காட்டில்
இதழ்களாய் கிழிபட்டு
சிதறிக்கிடக்க -
சொல்லிக் கொள்கிறேன் -
"துயிலுக துயிலுக
பூவென்றும் இதழென்றும்
கண்டு சொன்ன உணர்வுகளே
துயிலுக !
முள்ளென்றும் வலியென்றும்
உணர்த்துகின்ற உணர்வுகளே
துயிலுக ! "

ஒரு சின்ன துடிப்போடு
என் உணர்வுகள்
அடங்கிப் போகின்றன
எழுகின்றேன் நான்.

அவன் சந்தேகம் கொண்டவனாய்
மீண்டும் என் முன்னே கிழிந்திட்ட
பூக்களைப் பரப்பி வைத்தான்.

ஞாபகார்த்தமாய்
அவன் பூக்களை அள்ளிக்கொண்டு
அவன் முட்களை அள்ளிக்கொண்டு
என் பாதையில் நான் பயணித்தேன்.

அவன் வேலை முடிந்ததென
நான் சிரித்துக் கொண்டேன்.

/2000

எ.பி.சு.ரா.க - 1

எனக்குப் பிடித்த சுந்தர ராமசாமி கவிதைகளுள் இது ஒன்று.

-----------------
இந்த உலகம்
-----------------
வானம் வந்திறங்கும்போது இளைப்பாற
மேகத்தால் ஒரு கட்டில் செய்தேன்
காலை இளங்கதிர்களைக் கூட்டி
அவற்றின் ஓளியால் இசை செய்து
கட்டிலின் அருகே வைத்தேன்
விண்மீன்களை அள்ளியெடுத்து
தெருவெங்கும் இறைத்து வைத்தேன்.

கடுந்தவத்தின் முடிவில்
வானம் வந்திறங்கிற்று
சயனிக்க வேணும் என்றேன்
கழிப்பறை எங்கே
என்று கேட்டது வானம்.

- கொல்லிப்பாவை அக்டோபர் 1985
(சுந்தர ராமசாமி கவிதைகள் ப-99)

இதை மிகமிக ஆழமான கவிதையாக உணர்ந்தேன். கவிதை விவரிக்கும் தளம் ஒன்றாக இருக்க, அதில் பயணித்து அங்கு பார்த்ததை, உணர்ந்ததை நடைமுறை வாழ்வின் பல பக்கங்களில் பொருத்திப்பார்க்க முடிகிறது. அப்படி செய்யும் போது கவிதையின் அர்த்தம் இன்னும் ஆழமாகிக்கொண்டே போவதை உணரமுடிகிறது. கவிதையின் தலைப்பு அதன் அர்த்தத்தை கண்டுபிடிக்க வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. இப்படி எழுத வேண்டும் என்று ஆசை. இன்னும் எத்தனை வயதாகுமோ தெரியவில்லை.

நான்

விழிகளை விழிநீர் மறைக்க
விழிநீரை விழிநீர் மறைக்க
வழியும்
என் வலிகள்

வலிச்சுமை தாளாமல்
விரல்களைக் கொளுத்திய வெளிச்சத்தில்
ஓற்றையாய் திசைகளைத் தேடும்
என் பாதைகள்

நிஜங்களின் மரணத்தால்
அமைதியாய் துயில்கையில்
நிழல்களின் சூடுபட்டு
திடுக்கிடும்
என் உணர்வுகள்

காய்ந்து உதிர்ந்திடும் பயத்தால்
இதழ்கள் மலர மறுத்து
மொட்டாய் கட்டுக்குள்
என் கனவுகள்

வழிப்பட்ட வானையெல்லாம்
தன் முதுகிலே சுமந்து கொண்டு
வியர்த்து அயர்ந்திருக்கும்
என் சிறகுகள்

என்னவை இவையெல்லாம்
என் மீது போர்த்திக் கொண்டு
உள்ளுக்குள் உயிரோடு -
நான்

/2000

கிடைக்குமா சொல்லுங்கள்

ஆற்றங்கரை
ஆலமரம்
கிராமத்து ஊஞ்சல்

பெளர்ணமி நிலவு
பவர் கட்
பக்கத்தில் நண்பன்

சுத்தமான பேருந்து நிலையம்
கூட்டமில்லாப் பேருந்து
ஜன்னலோரத் தென்றல்

டிசம்பர் மாதக்குளிர்
கதகதப்பாய் ஒரு போர்வை
குளுமையான உறக்கம்

அறிவு அடக்கம் அழகு
எல்லோர்க்கும்

மழைச்சாரல்
ஜன்னலில் ஒரு சிட்டுக்குருவி
கொஞ்சம் கவிதை

கிடைக்குமா சொல்லுங்கள்...

/1997

நீ, நான் - நாம்

எனக்கே தெரியாத என்னை
எப்படியடா நீ மட்டும்
கண்டுபிடித்தாய் ?

என் நினைவெல்லாம் துவண்டுவிழும்
சங்கடப்பொழுதினில்
எனக்குப் பிடித்ததெல்லாம்
எனக்கே ஞாபகப்படுத்தி
என்னைப் பரவசப்படுத்த
எப்படி முடிகிறது -
உன்னால் மட்டும் ?

சத்தமாய் தானே சிரித்திருந்தேன் -
என் கண்ணீர் முகவரிகளை
நீ மட்டும் எங்கிருந்து
கண்டெடுத்தாய் ?

ஊரே மெச்சும்
மேடையெல்லாம் பேசும் - ஆனால்
தப்புத்தப்பாய் நான் போட்ட
கூட்டல் கணக்குகள்
உன் நோட்டுப் புத்தகத்தின்
கடைசிப் பக்கத்தில்

நீ மட்டுமே அறிந்த இரகசியம் -
நான் மகான் அல்ல

என் கால் பிடிக்கும்
புயலை உனக்குத் தெரியும்
எனைக் காயம் செய்யும்
பூவும் உனக்குப் புரியும்

இதுவரை என்னிடம் அதிகம்
திட்டும் குட்டும் வாங்கியது
நீ மட்டும் தான்

கூட்டமாய் சென்றோம்
அந்த மரத்தின் பூக்களையே
மணிக்கணக்காய் நான்
பார்த்திருந்த போது
என்னோடு இருந்தது
நீ மட்டும் தான்

இதனால் மட்டுமல்ல -
என் வலிகளை
உன் விழிகளும்
சுமப்பதால் தான் சொல்கிறேன் -
நீ என் நண்பன்

நீ, நான் - நாம்
போதுமடா இந்த பூமிக்கு

/1998

Friday, August 18, 2006

காய்ந்த சுவடுகள்

பாதத்தின் மென்மை
பாதைக்குப் புரிவதில்லை


பாறை உயிரற்றது
பாலை மணல் உயிரற்றது
காய்ந்த முட்களும் உயிரற்றவை
பிணங்களே பாதையானால்
மனங்களுக்கு மதிப்பேது ?

பாதத்தின் மென்மை
பாதைக்குப் புரிவதில்லை

என் கண்கள் கரைந்திருக்கின்றன
என் கால்கள் தளர்ந்திருக்கின்றன
என் கைகள் காற்றில் வெறுமனே துழாவுகின்றன
என் இதயத்துடிப்பை அடிக்கடி நானே
சோதித்துப் பார்க்கிறேன்

பாதத்தின் மென்மை
பாதைக்குப் புரிவதில்லை

என் உயிர் வலிக்க ஒப்புக்கொள்வேன்
ஆனால் -
நான் சிரித்தாலே மலர்ந்து விடும்
என் தோட்டப்பூக்கள்
பொசுங்கி விடப் பொறுப்பதெப்படி ?
பொறுத்தேன்

பாதத்தின் மென்மை
பாதைக்குப் புரிவதில்லை

பாறையில் கால் இடறி
பாலையில் விழுந்தேன்
விழுந்த இடமெல்லாம்
காய்ந்த முட்கள்
என் ஆறறிவில் ஓரறிவு
இடம் பெயர்ந்து போனது - பாறையால்.
என் சிறகுகளெல்லாம்
சருகாயின - பாலையால்.
என் இதயத்தின் எல்லா அறைகளும்
அறுபட்டு போயின - முட்களால்.
பிணமானேன் நான்,
பிணங்களால் நான் பிணமானேன்.

எழுந்துவிட முயற்சித்ததுண்டு - ஆனால்
எழும்போதெல்லாம் வீழத்தான் வேண்டுமென்றால்
வீழும்போதெல்லாம் உயிர்கொண்டு எழுவானேன் ?
பிணமாய் கிடந்தேன்

திடீரென்று -
ஒரு பாதம் என் மீதேறிச் சென்றது
எதிர்பார்க்கவே இல்லை -
என் உடலெங்கும்
இரத்தச் சுவடுகள்

சுவடுகளின் சொந்தக்காரன்
சுருக்கமாய் சொன்ன வார்த்தைகள் -
"கரைகின்ற கண்களுக்கு
காட்சிகள் தெரிவதில்லை.
நிமிர்ந்து நில் - உலகம் தெரியும்.
தெளிந்து நில் - உலகம் புரியும்"

ஏதோ புரிந்தது போல் எழுகிறேன்
மீண்டும் அழுகிறேன் - ஆனால்
இம்முறை எழுகின்ற கண்ணீரை
இதயத்துள் சேமிக்கின்றேன்.
ஆதலின் தெளிவான கண்கள்.

என் முன்னால் பார்க்கிறேன்
தூரத்துப் பச்சை தெளிவாய் தெரிகிறது.
ச்ற்றே திரும்பிப் பார்க்கின்றேன் -
என் கால் இடறிய கற்களெல்லாம்
கற்சிலைகளாய் உருப்பெறுகின்றன.
என் பாலை மணல் முகடு
நிலா மழையில் நனைகிறது.
என் முட்களைச் சுற்றியெங்கும்
முகம் மலர்ந்த ரோஜாக்கள்.

என் நெஞ்சத்தின் ஆழம் வரை
அப்பிக்கிடந்த ஈரச்சுவடுகள்
காய்ந்திருந்தன.
இதோ தயாராகி விட்டது -
இன்னொரு இரத்தச் சுவடு.


/1997

Notes:
If I remember correctly, this is my first kavidhai. It wasn't easy :)

Wednesday, August 16, 2006

தென்றல் வரும் வேளை

உன் பாதம் தன் மேல் பட்ட சந்தோஷத்தில் உற்சாகக் கூச்சல் போட்டிருக்க வேண்டும் அந்தப் பாதை. உன் காலடி ஓசையை இங்கிருந்தே நான் கேட்கிறேன். இதோ, மிக அருகில்.

இன்னும் சற்றைக்கெல்லாம் என் மனக்கதவை நீ வந்து தட்டப் போகிறாய். உன்னை வரவேற்கத் தயாராகிறேன். என்னவெல்லாம் செய்யப் போகிறாய் நீ ?

உனக்கு சிரமம் தராமல் இப்போதே என் கதவுகளைத் திறந்து வைத்துவிடவா ? இதுவரை அப்படிப் பழக்கமில்லை எனக்கு. இருந்தாலும் இப்போது கதவுகளை நோக்கி ஓடுகின்றேன்; அவற்றை திறக்க எத்தனிக்கின்றேன் - பொறு, பேசலாம்.

உன்னை இதற்கு முன் நான் பார்த்ததில்லை - எப்படி இருப்பாய் நீ ? என்ன பெயர் ? நான் ஒரு பெயர் வைத்தேன் உனக்கு; சொல்கிறேன்.

உன்னைப் பார்த்ததில்லையே தவிர, உணர்ந்திருக்கின்றேன். பெருங்கூட்டத்தில் மிக எளிதாக நான் தனிமைப்படும்போது, சற்றே நான் மனச்சோர்வு அடைவதற்குள், ஓடி வந்து என்னோடு கைகோர்த்துக் கொள்கிறாய்.

இரயில் பயணத்தில் மழைச் சன்னலில் கவிதை எழுதி முடிக்க, அதை எனக்கு வாசித்துக் காட்டுகிறாய்.

பச்சைக்கம்பளப் புல்வெளியில் வாழ்க்கையே புரிந்தது போல் மனம் விரியும் பொழுது, அருகினில் அமர்ந்து கொண்டு என் தோளோடு தலை சாய்த்துக் கொள்கிறாய்.

நிசப்தச்சந்தடியில் மனதெல்லாம் பரபரக்க நினைவெல்லாம் திசை தொலைத்துத் தடுமாறும்போது, என் மேல் விழுந்த ஒற்றைப் பூவில் பேரமைதி தந்து விடுகிறாய்.

இப்படியாக, உன்னைப் பார்த்ததில்லையே தவிர, உணர்ந்திருக்கின்றேன். எங்கோ இருந்தாலும் என் மனத்தின் உள் உணர்வை அறிந்தவளாய், அவற்றின் உருவம் தாங்கி வருவாயா ?

நீ வந்து சேரும் இடம் - ஒரு பூந்தோட்டம், இருக்க வேண்டிய இடம். இங்கு தான் நெடுங்காலம் நான் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தேன். நடப்பதெல்லாம் என்னவென்று புரிந்து, ஏன் என்று புரியாத வரையில் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தேன்; அது புரிந்ததும், நிறுத்திக் கொண்டேன்.

பூக்களுக்காக ஏங்காமல், வேர்களைப் பார்த்த வைராக்கியத்தில் நான் வியர்வை சிந்தத் தொடங்க, அவற்றில் பூத்தவை தான் - வரவேற்பறையில் இன்று நீ பார்க்கப் போகும் ஒரு சில பூக்கள். பூக்களின் வாசம் அறையை நிறைத்திருக்க, வேர்களின் இறுக்கம் மட்டும் இன்னும் நீங்காமல் மனதில்.

உன் பிள்ளைமுகச் சிரிப்பில், என்னைப் புரிந்ததை எனக்குச் சொல்லும் உன் விழிகளில், உன்னைப் புரிந்ததை நான் உனக்குச் சொன்ன வெட்கப் பூரிப்பில், நம் அன்பின் நெகிழ்தலில் - இங்கு இன்னும் பல கோடிப் பூக்கள் பூக்கச் செய்யலாம். அன்று வரும் தென்றல், நம் தோட்டப்பூக்களின் தலைகோதி விளையாட.

இப்போது கதவு தட்டப் படும் ஓசை கேட்கிறது. மெதுவாய் சென்று கதவுகளைத் திறக்கின்றேன். கண்மணீ !

/30 June, 2006.

Tuesday, August 15, 2006

பிரிவு - 1

பிரிவென்ற பேதைமையை
திருத்து.

ஏனெனில்
உன்னையும் தான்
எடுத்துப் போகிறேன் -
என்
விழித்திரை ஓவியமாய்.

/2001

பிரிவு - 2

பிரிவு தான் இது
பிரிந்து போ

என் விழிகளுக்கு
எட்டாத தொலைவில்
தொலைந்து போ

உன் உலகில்
உன்னைப் பூட்டிக் கொள்
என் பிறந்த நாளை மற
எனக்குப் பிடித்ததெல்லாம் மற
என்னையும் மற

ஆனால்
என்றேனும் என் நினைவுச்சறுக்கத்தில்
விழுந்துருண்டு
நான் மூர்ச்சிக்கையில்
உன் பெயரை மட்டும்
உச்சரிப்பேன்

அன்று மட்டும்
மறக்காமல்
உன்னை அனுப்பி வை.

/2001

கனவுகள் தேவை

நிஜம் - ஒரு முரடன்
அவன் வலியவன்

நான் சிரித்தால்
அவன் சொக்கிவிடப் போவதில்லை
நான் அழுதால்
அவன் கரைந்துவிடப் போவதில்லை
அவன் - ஜடம்.

நான் விரும்பி
அவனை அழைத்ததில்லை
நான் விரும்பினாலும்
அவன் போவதில்லை
அவனை போகச் சொல்லியும் பயனில்லை
அவன் - செவிடன்.

சாதுவைப் போல் என்னிடம் நடிப்பான்
கைபிடித்தென்னை அழைத்துச் செல்வான்
பூக்களைக் காண்பிப்பான்
என் மனதை இழுத்து வந்து
அதன் மேல் இருத்தி வைப்பான்
சில நாழிகை கூட கழிந்திருக்காது
எங்கிருந்தோ முள்ளெடுத்து
பூக்களைக் கிழித்தெறிந்து
"போகலாம் வா" என்பான்.

ஏதேதோ எடுத்து வந்து
எல்லாம் என்னிடம் தருவான்
எனக்கும் சிறகுகள் கொடுத்து
வானத்தை விரித்து வைப்பான்
மறந்தும் நான் சிரித்து விட்டால்
என் விழிகளுக்கு சுமை கொடுத்து
உரக்கக் கூச்சலிடுவான்.

அவன் மூடன் -
எனைத் தோற்க வைப்பான்.
துவண்டு நான் கிடக்கையிலே
மீண்டும் எனைத் தோற்க வைப்பான்.

உணர்வுகள் ரணமாயின
மருத்துவனாய் நடித்தான் -
வடு கூட வலி சொன்னது.

எத்தனை நாள்,
இன்னும் எத்தனை நாள் இவனோடு ?
முடிவெடுத்தேன்
நிஜத்தை என் எண்ணம் போல் செதுக்கி
சின்னச் சின்னக் கனவுகளில்
நிறைத்து வைத்தேன்.
கனவுகளைப் ப்ற்றிக் கொண்டேன்.

நிஜத்தோடு போராட
நிஜத்தோடு போராட
இன்னும் கனவுகள் தேவை.

/1999

இருத்தல்

உயிர்த்திரு உணர்வே உயிர்த்திரு
காலின் கீழே உலகம் நழுவும்
விரித்தால் உதிரும் இருகைச் சிறகும்
விழிநீர்த்திரளாய் விழியும் வழியும்
கைப்பிடி பொருளும் காற்றில் கரையும்
நிலையில் மருண்டு நினைவும் துவளும்
இருந்தும் நீயும் -
உயிர்த்திரு உணர்வே உயிர்த்திரு!

பொறுத்திரு மனமே பொறுத்திரு
கனவைக் கொளுத்தி காலம் சிரிக்கும்
விடியும் பொழுதும் இரவாய் தொடரும்
உதறும் உள்ளம் உறவாய் இருக்கும்
நினைவுப்பையை முட்கள் நிரப்பும்
உன்னைச் சிரிக்கும் ஊரும் பேரும்
இருந்தும் நீயும் -
பொறுத்திரு மனமே பொறுத்திரு!

விழித்திரு உயிரே விழித்திரு
நீ சொன்னால் மட்டும் உலகம் சுழலும்
விடுக்கும் வார்த்தை தலையாய் அசையும்
ஊரைக் கூட்டி மேடை மெச்சும்
உறவால் வீட்டின் அறைகள் நிறையும்
பூக்கள் சூழ்ந்து இனிக்கச் சிரிக்கும்
இருந்தும் நீயும் -
விழித்திரு உயிரே விழித்திரு!

/2004

கல்

கல் - இதன் மேல் காக்கை
இன்றும் எச்சமிட்டது.
ஆடு மேய்ப்பவன்
கடந்து செல்லும் போது
கழியால் ஓங்கி அடித்தான்.
நேற்று பெய்த மழைக்கு மிச்சமாய்
ஒட்டிக்கிடந்த ஈரச்சுவடுகள் காய்ந்திருக்க
கரையாமல் கரடுமுரடாய்
கல்.

உணர்வுகளின் வாசம்
அறிந்திருக்க வாய்ப்பில்லை.
காற்றோடு மரங்கள் பேசுவதை
கவனித்துப் பழக்கமில்லை.
இது கல் - வெறும் கல்.
இதன் உடைமை - வெறுமை.

திடீரென்று பூக்களெல்லாம்
மொத்தமாய் திரும்பிப் பார்க்கின்றன -
நீ வருகிறாய்.

அருகினில் அமர்கிறாய் -
உன் சுவாசம் பட்ட வெப்பம்
ஏனோ உறைக்கிறது.

காற்றினில் உன் கூந்தல்
கையெழுத்திடுகிறது -
விழித்துக் கொள்கின்றன கண்கள்.

சரம்சரமாய் சிரிக்கிறாய் -
செவிகள் திறந்து கொள்கின்றன.

பேச ஆரம்பிக்கிறாய் -
மரங்களையெல்லாம்
மெளனிக்கச் சொல்கிறது கல்.

அதிசயமாய் வந்த வெட்கத்தில்
ஏதோ உளறி வைக்கிறாய் -
சிரிக்கவும் செய்கிறது கல்.

உன் கண்கள் பனிக்கின்றன -
கரங்களை செதுக்கிக் கொள்கிறது கல்.

காற்றினில் விழுந்து விட்ட
உன் பூக்களைத் தாங்கிப் பிடிக்கிறது -
மென்மையாகிறது கல்.

ஏனோ நீ வந்த வழியே
சொல்லாமல் போகிறாய்.
நீ விட்டுச் சென்ற வாசத்தை
பூக்களெல்லாம் சிறைபிடிக்க -
உன் காலடி ஓசையை
காற்று வந்து கொண்டு செல்ல -
எல்லாம் போகிறது.

விரக்தியில்
சிரிக்கிறது கல் - யாருக்கும்
செவியில்லை.
அழுகிறது கல் - யாருக்கும்
விழியில்லை.

மீண்டும் மரங்கள் பேச ஆரம்பிக்க
மெளனிக்கிறது கல்.

காக்கை வந்து எச்சமிடுகிறது.
அதோ,
ஆடு மேய்ப்பவனும்
திரும்பி விட்டான்.

கல் நெஞ்சமடி உனக்கு.

/2000

Monday, August 14, 2006

எங்கே போகின்றாய் ?

பழகிப்போன யுத்தக்களத்தில்
இன்றும் இன்றும் விழிக்கின்றேன்
இமையாய் துடிக்கும் இதயம் தேடி
மீண்டும் மீண்டும் தொலைகின்றேன்

என் கண்கள் கனக்கும் காலப்பொழுதில்
கன்னக்குழியோடு வருகின்றாய்
ஒட்டடை கோர்த்த மயிலிறகாக
கொட்டிக் கிடக்கும் நினைவெல்லாம்
எடுத்துக் கொடுத்துப் போகின்றாய்

நினைவுச்சுகத்தில் உறங்கும் மனது
விழித்த உடனே உன்னைத் தேடும் -
எங்கே எங்கே போகின்றாய் ?

/2001

கண்மணிக் கவிதைகள் - 2

தூக்கம் கலைந்த ஒரு பின்னிரவில்
இதழ்கள் குவிந்துறங்கும் உன் முகப்பூவை
இமைக்காமல் பார்த்திருப்பேன் -
கள்ளப் புன்னகை சிந்தி
இன்னும் நீ சிவந்திருப்பாய்.

வேல்விழியோ கூர்விழியோ
சொல்மொழியோ கள்மொழியோ என்றெல்லாம்
கவிதைப் பிதற்றல்கள் செய்வேன் -
மெச்சியென் பொற்கிழியாய் தருவாய்
தலையில் குட்டும் கன்னத்து முத்தமும்.

சேர்த்து வைத்த உன் சிரிப்பாலே
நிரம்பி நான் வழிந்திருக்க இன்றிந்தப் புதுச்சிரிப்பை
எங்குதான் வைப்பதென்பேன் -
சொன்னாலும் கேளாமல்
இன்னுமொன்றைச் சிரித்து வைப்பாய்.

தேக்கி வைத்த ஒளியெல்லாம்
வானிறைக்கும் நிலவிருக்க என் நெஞ்சத்தின்
முள்வலிகள் சொல்வேன் -
கண்ணீர் ஒரு துளி தருவாய் போதும்
என் காயங்கள் வடுவின்றி ஆறும்.

/2004

இளமைக் கனவுகள்

நித்தம் நடத்தும் வாழ்க்கைப் போரில்
காகிதப் பணத்தை
ஜெயிப்பதற்கே
போரிட்டு மடிகின்றன -
என் எல்லா நேரங்களும்.

தப்பிப் பிழைத்த
சில நிமிடத்துளியில்
போர்க்கள ஓலம் துறந்து
அமைதிக்காய்
மனது தவிக்கையில் -

ஓடி வந்து
என் மார்பில் சாய்ந்தபடி
தேம்பி அழுகின்றன -

என் இளமைக்கால
இனிமைக் கனவுகள்.

/2002

தனிமை

யாருமில்லாத தனிமை.
நிசப்தம்.

வாய்ப்புக் கிடைத்ததும்
கட்டவிழ்ந்து கொள்கின்றன
என் நினைவுகள்.

ஜெயித்தவையெல்லாம்
கூடிக் கும்மாளம் போட
அடிபட்ட மீதம்
அலறித் தவித்திட

செவிகளை மூடுகின்றேன் -
தனிமை இரைச்சல்
தாளாமல்.

/2000

கண்மணிக் கவிதைகள் - 1

வழிகின்ற கண்ணீரின்
கன்னத்து வழித்தடத்தை
விரல் துளியால்
துடைக்கும் -
மழை.

உடையெல்லாம் சலசலக்க
உடலோடு கட்டிக் கொண்டு
உள்ளம் வரை
வருடிச் செல்லும் -
தென்றல்.

வாழ்கைவழித் திருப்பத்தில்
தொலைத்து வைத்த சிரிப்பெல்லாம்
அள்ளி வந்து
இதழ் நிறைக்கும் -
மழலை மொழி.

நினைவுகளின் சுமை அழுத்தி
இறுக்கம் கண்ட
மனதெல்லாம்
சட்டென்று சிறகாக்கும் -
பூக்கூட்டம்.

இவையோடு இருக்கும் போது
எங்கோ நீ இருந்தாலும் -
உன்னை உணர்கின்றேன்
எந்தன் கண்மணியே !

/oct, 2005

நன்றியுரை

நன்றி என் நண்ப,

உணர்வோடு ஒட்டாத
வெறும் சப்தங்களையே
வார்தைகளாய் நம்பி
நான் தலையசைத்துக்
கிடந்த போது -

நீ தான் நீ தான்
கற்றுத் தந்தாய்

சில ஆழமான மௌனங்களின்
அழுத்தமான வார்த்தைகளைப்
புரிந்து கொள்ள.

நன்றி என் நண்ப,

யாரோ தந்த தொடக்கத்தில்
காற்றிலே வரைந்ததையெல்லாம்
கனவிலே
நான் வைத்த போது

நீ தான் நீ தான்
உணரச் செய்தாய்

என் ஓலைக்குடிசை வழியே
ஊடுவி வந்து விழும்
ஒற்றை ஒளிக்கற்றையின்
வெப்பத்தை.

நன்றி என் நண்ப,

பூக்களையே பார்த்துப் பார்த்து
அழகை நான்
வியந்த போது

நீ தான் நீ தான்
காணச் செய்தாய்

ஏதோ ஓர் ஆழத்தில்
எங்கோ முடியும் பயணத்தில்
தன்னைச் சிதைக்கும்
வேர்களின் வியர்வையை.

நன்றி என் நண்ப,
நீ தான் என் சொந்தம்
நீ தான் என் சொத்து
உன் பெயர் -
சோகம்.

/1999

கடிதம்

மளிகைபாக்கி வாடகைபாக்கியின்
ஏச்சுப்பேச்சையும்
உன்னைப் போலவே நைந்து போன
உன் சேலையின்
சமீபத்திய கிழிசலையும்
உன் பழைய இருமலையும்
மறைத்துக் கொண்டு
கடிதத்தில் எழுதுகிறாய் -
நலமாக இருப்பதாக.

வாராத தண்ணீருக்கு
வாடி நிற்கும்
வெற்றுக் குடமாய்
தினந்தினம் வேலைக்குப் போராடி
பாதி வயிற்றோடு
கிறுகிறுத்தாலும்
பதிலுக்கு நானும்
எழுதுகிறேன் அம்மா -
நலமாகவே இருப்பதாக.

/2001

அஞ்சலி

மரத்தாயின் மடிமண்ணில்
மடிந்திருக்கும் - பூமக்கள்.

இரக்கமில்லா அவசரக்கால்களில்
மிதிபடும்
அதன் சடலங்கள்.

சோகச் சொல்லெடுத்து
அஞ்சலிக் கவிதை வடிக்கையில்
கவனித்தேன் -
நசுங்கிய இதழ்கள்
என் கால்களிலும்.

வெட்கி மரித்த
என் கவிதைக்கு
அஞ்சலியாய் வீழும் -
இன்னும் சில
பூக்கள்.

/2001