Saturday, September 2, 2006

எ.பி.சு.ரா.க - 1

எனக்குப் பிடித்த சுந்தர ராமசாமி கவிதைகளுள் இது ஒன்று.

-----------------
இந்த உலகம்
-----------------
வானம் வந்திறங்கும்போது இளைப்பாற
மேகத்தால் ஒரு கட்டில் செய்தேன்
காலை இளங்கதிர்களைக் கூட்டி
அவற்றின் ஓளியால் இசை செய்து
கட்டிலின் அருகே வைத்தேன்
விண்மீன்களை அள்ளியெடுத்து
தெருவெங்கும் இறைத்து வைத்தேன்.

கடுந்தவத்தின் முடிவில்
வானம் வந்திறங்கிற்று
சயனிக்க வேணும் என்றேன்
கழிப்பறை எங்கே
என்று கேட்டது வானம்.

- கொல்லிப்பாவை அக்டோபர் 1985
(சுந்தர ராமசாமி கவிதைகள் ப-99)

இதை மிகமிக ஆழமான கவிதையாக உணர்ந்தேன். கவிதை விவரிக்கும் தளம் ஒன்றாக இருக்க, அதில் பயணித்து அங்கு பார்த்ததை, உணர்ந்ததை நடைமுறை வாழ்வின் பல பக்கங்களில் பொருத்திப்பார்க்க முடிகிறது. அப்படி செய்யும் போது கவிதையின் அர்த்தம் இன்னும் ஆழமாகிக்கொண்டே போவதை உணரமுடிகிறது. கவிதையின் தலைப்பு அதன் அர்த்தத்தை கண்டுபிடிக்க வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. இப்படி எழுத வேண்டும் என்று ஆசை. இன்னும் எத்தனை வயதாகுமோ தெரியவில்லை.

No comments: