Tuesday, October 30, 2007

மழையே மழையே

இந்த மழைக்காலத்திலும்
மின்விசிறி சுழலும் சத்தமில்லாமல்
உறக்கம் வருவதில்லை எனக்கு.

கனத்த போர்வையை சுற்றிக்கொண்டு
தேநீர் சுவைத்தபடியே பார்க்கிறேன்
என் கண்ணாடி ஜன்னல் வெளியே
மெளனமாகப் பெய்கிறது மழை.

இன்னும் வேகமெடுத்து
மரங்கள் ஆடும் மழைத்தாண்டவம்
என் ஜன்னலில் தெறித்த துளிகள்
நெளிந்து வடிகையில் அழகாய் சிதைகிறது.

குளிரும் கதகதப்பும் சேர்ந்த கலவையில்
உற்சாகம் பொங்க
"மழையே மழையே"
என்று நான் தொடங்கும் இக்கவிதையை
ஒழுகும் குடிசையில் நடுங்கும் தன் பிள்ளைகளை
கைகொண்டு பொத்திக் காக்கும்
எவளும் இரசிக்கப் போவதில்லை.

/31st Oct, 2007