Saturday, October 11, 2008

நவீனனின் சிரிப்பு

பொறி கலங்கி தள்ளாடி
பழுப்பேறிய வேட்டி கலைந்து
குடிச்சி நாலுநாளாச்சு சாமீ
பிச்சை கேட்கும் கிழவனை
எப்படி நான்
கடப்பது அப்பா

அடிக்கொருதரம் முன்னகர்ந்து
இதோ சூழ்ந்து கொண்டது அடர்வனம்
முன்பொருதரம் இப்போது
தொலைந்திருக்கிறேன்
வேறு நினைவில்லை

வேர்பிடித்திருக்கும் கவிதையொன்று
தேடி விரைகிறது
ஆழப்புதைந்திருக்கும்
தன் கண்ணீர் துளிகளை

ஏன் எனக்கு?
ஒன்றிலிருந்து ஒன்றொன்றாய்
சர்வமும் விதி
இட்டதை உண்கிறேன்
அல்லது இயலாமை

என்னையே நான்
திரும்பித் திரும்பி பார்த்து
தேங்கி நிற்பதை
இப்போது நான் பார்க்கிறேன் நவீனா
இனியேனும் கால அம்பை
முன்னோக்கி பாய்ச்ச வேண்டும்

சிரிக்காதே நவீனா
சிரிக்கிறான்.

/12 Oct, 2008.

(பி.கு: சென்ற வாரம் காவ்யா பதிப்பகத்தை தேடிப்பிடித்து நகுலன் புத்தகங்கள் வாங்கினேன். நவீனன் தொற்றிக்கொண்டான் :))