Friday, June 26, 2009

இந்த நாளில்

விரும்பி வாங்கிய புத்தகம்
வீசி எறிந்ததில் கிழிந்தது

தேடித்தேடி வண்ணம் சேர்த்து
நெடுநேரம் சிரத்தையோடு
வரைந்த ஓவியம்
முடித்ததும் நிறமிழந்து போனது

இருகை விரித்தழைக்கும்
என் பிள்ளையின் மழலைச் சிரிப்பை
எளிதாக நிராகரித்துப் போகிறேன்

மனிதத்தின் தோலுரிந்து தசைகள் முறுக்கி
ஈறு தெரிய என் மிருகம் உறுமுகிறது

உன் துரோகத்தின் நினைவுகளை
சுமந்து நிற்கும் இந்த நாள் முழுதும்
போதனைகள் கடந்து
வன்மம் கொண்டலைகிறது
என் பிரேதம்.

Tuesday, April 28, 2009

பதிவுத் தபாலில் புத்தகம்

பதிவுத் தபாலில் புத்தகம்
வந்து சேர்ந்தது

தடிமனான நூற்கயிற்றால் இறுக்கியதில்
மூச்சுத்திணறி
நாற்புறமும் தடம் பதிந்திருந்தது

கடைசி இருபத்தியேழு பக்கங்கள்
அலட்சியமாக மடங்கி நைந்திருந்தது

ஒரு பக்கத்து அட்டை மழைநீர் இறங்கி
ஈரம் கோர்த்திருந்தது

கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது
எழுதியவனுக்கு எப்படியிருக்குமோ

Tuesday, April 21, 2009

இங்கு வாருங்கள்

பொருள் சார்ந்த உலகத்தின் பல்சக்கரங்களில்
கவலைக்கிடமான வகையில்
வசமாக சிக்கிக் கொண்டீர்கள்

எலும்பு கண்டு பின்னலையும்
நாயொன்று முச்சிரைக்க
உங்களுக்கு அடுத்தபடியாக
ஓடிக்கொண்டிருக்கிறது

எத்தனை தான் சேர்த்தாலும்
இரவெல்லாம் தேடித்துரத்தியும் சிக்காமல்
விடியலுக்கு அருகில்
விழிகளின் இரத்தத் தீற்றலாய்
தினமும் இறக்கும் உங்கள் உறக்கம்

பெட்டிக்குள் இருக்கும் பெட்டிக்குள் இருக்கும் பெட்டிக்குள்
ஒளிந்திருக்கும் வாழ்க்கையென
பணச்சாவி தேடித்தேடி அழிந்தீர்கள்

போதும் இனி இங்கு வாருங்கள்
வாழப் படிக்க வாருங்கள்
உங்கள் குப்பைக்கூடங்களை சுத்தம் செய்து
ஆழ்ந்த தியானத்தின் ஜோதியில் புதுப்பித்து
புலன்களைத் திறந்து
பிரபஞ்சத்தின் உயிர்துடிப்பு
உங்களுக்குள் கேட்கச் செய்கிறோம்

உங்கள் உற்றார் உறவினர்
நண்பர்களுக்கும் சொல்லுங்கள்
இருக்கைக்கு முந்துங்கள்
நான்கு நாள் வகுப்புக் கட்டணம்
வெறும் ஆயிரத்து நானூறு மட்டுமே

/22 Apr 2009

Monday, April 6, 2009

அப்பா வந்திருந்தார்

நேற்று அப்பா வந்திருந்தார்.

இப்போதெல்லாம் குடிப்பதை
நிறுத்திவிட்டதாகவும்
அம்மாவின் காயங்களுக்கு மருந்திட்டபோது
தவிர்க்க முடியாத கண்ணீர்
மன்னிப்பு என்ற சொல்லில்
தெறித்ததையும் சொன்னார்.

கையாடல் செய்த பணத்தை
அலுவலகத்தில் திருப்பி செலுத்திவிட்டதாகவும்
தான் துரோகம் இழைத்த நண்பரொருவரை
நேரில் சந்தித்தது
வருத்தம் தெரிவித்ததையும் சொன்னார்.

நான் பேசிய மேடையிலிருந்து
கடைசி வரிசையில் யாரும் அறியாமல்
நின்று இரசித்ததை சொல்லும் போது
சிறிது கலங்கினார்.

பேரப்பிள்ளைகளின் பெயர்
கேட்டுக் கொண்டார்.
அவர்களுக்கு தான் சொல்ல விரும்பும்
கதைகளைப் பற்றி அவர் ஆரம்பித்த போது
நானும் கேட்கலாமா என்று கேட்டுக்கொண்டே
அவசரத்தில் விழித்து விட்டேன்.

ஒரு நீண்ட பொழுதின் அயர்ச்சிக்குப் பிறகு
மீண்டும் அப்பா வரும் கனவுக்காக
காத்திருக்கத் தொடங்கினேன்.

/6th April, 2009.

Tuesday, January 6, 2009

பலி

ஞானச்செறுக்கேறி சித்தனாய் பித்தனாய்
காடூடே போனவனும்

மேலான பொருள் தேடும் வேட்கையோடு
பேரண்டம் புரட்டிவிடப் புறப்பட்டவனும்

மோகம் வழிந்தோடும் மெல்லிரவில்
சதைப்பிண்டம் குத்தித் தின்று
போதை தலைக்கேறும் உச்சத்தில்
சித்தாந்தக் கூவலோடு சரிந்தவனும்

உண்டு கழித்துறங்கி வேறொன்றும் உணராமல்
மந்தைக்குள் பயமின்றி ஒளிந்திருக்கும் மூர்க்கனும்

மிக உரிமையோடு சிதைக்கக்கூடும்
முன்பொருநாள்
குருவிகள் வந்தமரும் மரக்கிளையில்
அண்ணாந்து ஊஞ்சலாடும்
சின்னப்பெண்ணொருத்தி
சிருஷ்டித்த கனவுகளை.

/6th Jan, 2009

Saturday, October 11, 2008

நவீனனின் சிரிப்பு

பொறி கலங்கி தள்ளாடி
பழுப்பேறிய வேட்டி கலைந்து
குடிச்சி நாலுநாளாச்சு சாமீ
பிச்சை கேட்கும் கிழவனை
எப்படி நான்
கடப்பது அப்பா

அடிக்கொருதரம் முன்னகர்ந்து
இதோ சூழ்ந்து கொண்டது அடர்வனம்
முன்பொருதரம் இப்போது
தொலைந்திருக்கிறேன்
வேறு நினைவில்லை

வேர்பிடித்திருக்கும் கவிதையொன்று
தேடி விரைகிறது
ஆழப்புதைந்திருக்கும்
தன் கண்ணீர் துளிகளை

ஏன் எனக்கு?
ஒன்றிலிருந்து ஒன்றொன்றாய்
சர்வமும் விதி
இட்டதை உண்கிறேன்
அல்லது இயலாமை

என்னையே நான்
திரும்பித் திரும்பி பார்த்து
தேங்கி நிற்பதை
இப்போது நான் பார்க்கிறேன் நவீனா
இனியேனும் கால அம்பை
முன்னோக்கி பாய்ச்ச வேண்டும்

சிரிக்காதே நவீனா
சிரிக்கிறான்.

/12 Oct, 2008.

(பி.கு: சென்ற வாரம் காவ்யா பதிப்பகத்தை தேடிப்பிடித்து நகுலன் புத்தகங்கள் வாங்கினேன். நவீனன் தொற்றிக்கொண்டான் :))

Monday, July 28, 2008

பாமரன் கவிதைகள்

பூ நிலவு இரவென்று
அங்கங்கே தெரிந்தாலும்
முழுவதும் வாசித்தால்
இக்கவிதையில் எதுவுமே புரியவில்லை
என்ன செய்வது என்றான்

புரிந்து கொண்டால்
ஏழாவதுஅறிவின் முதுகுப்புறம்
மயிலிறகால் வருடும் சுகம் கிட்டும்
எதற்கும் ஒற்றைக்காலில் நின்று
உச்சிவேளை சூரியனை
மூன்றுமுறை உற்றுப்பார்த்து
பின் கீழிருந்து மேலாய்
வாசித்துப் பார் என்றேன்

குட்டிச் சுவரில் முட்டுக்கொடுத்து
தலைகீழாய் நின்று படித்தால்
பலன் இருக்குமா என்றான்

அதற்கு வீறல் அருவம்
இருப்பு பூதவுடல்
என்றொரு கவிதை இருக்கிறது
தரட்டுமா என்று கேட்பதற்குள்

ஆளைக் காணோம்.

/28th July, 2008