Friday, October 27, 2017

பிராயச்சித்தம்

இருபதாம் வயதிற்கெல்லாம்
மூன்று குழந்தைகளை 
பெற்றெடுத்தபின்
விதவைக்கோலம் பூண்டு
எண்பது வயதுவரை
வாழ்ந்து நொந்தாள்
கொள்ளுப்பாட்டி.

வாழ்நாளெல்லாம்
கணவனின் கையை எதிர்பார்த்து
பின் மகன்களின் கையை எதிர்பார்த்து
தீரா கனவுகளின் சுமையோடு
கண்மூடினாள்
பாட்டி.

தள்ளாடும் கணவனிடம்
போராடித் தோற்று
பின் தன்னந்தனியாய்
பிள்ளைகளைக் காக்க
பெரும்யுத்தம் நடத்தி
கரை சேர்ந்து
துவண்டு விழுந்தாள்
அம்மா.

பாரதியின் புதுமைப்பெண்ணாய்
படித்து வேலை பார்த்து
வீட்டிலும் சுரண்ட
வெளியிலும் சுரண்ட
நாய்பிழைப்பென்று நொந்தாள்
தங்கை.

அதனால்தான் என்னவோ -
ஆண்டாண்டு காலமாய்
ஆண்குலம் இழைத்த பாவத்திற்கு 
சிறு பிராயச்சித்தம்
தேடுவதாய் உணர்கிறேன் -
அயர்ந்து படுத்திருக்கும் 
மனைவியின்
கால்பிடித்து விடும்போது.

Wednesday, May 3, 2017

என்னால் முடிந்தது

இல்லாத காரணம் சொல்லி
உன்னை தொலைபேசியில்
அழைத்திருக்கலாம்

மணிக்கொருதரம் ஏதேனும்
குறுஞ்செய்தி அனுப்பியிருக்கலாம்

சரியாக திட்டமிட்டு
நம் சந்திப்பை
நிகழ்த்தியிருக்கலாம்

பேச்சினூடே உன் புன்னகையின்
பேரழகை சிலாகித்து
சில வார்த்தைகள்
சேர்த்திருக்கலாம்

குறைந்தபட்சம்
உன் பிறந்தநாளன்று முதல்ஆளாக வாழ்த்தியிருக்கலாம்

என்ன செய்வது?
என்னால் முடிந்ததெல்லாம் -
பெருவனத்தில்
என்றேனும் நீ வந்து பறிக்க
காத்திருக்கும் ஒற்றை பூவாய்
உனக்கான ஒரு கவிதையை
எழுதிவிடுவது தான்.

Thursday, February 23, 2017

யாருக்குத் தெரியும்

மாபெரும் மலைதனை கடந்து
பேரிருள் படர்ந்த
அடர்வனத்திடை அலைந்து

செம்பூவிதழ் வேய்ந்த
பூங்குடில் வந்தடைந்து
காற்றென நுழைந்து - அதன்
கதவுகள் திறந்து

கால் கிழிக்கும்
கண்ணாடித்துண்டுகளாய்
சிதறிக்கிடக்கும் - உறைந்த
கண்ணீர்துளிகள் கடந்து

கண்ணுக்குப் புலப்படாத
இருட்டறையில் புதைந்திருக்கும்
பெட்டகத்துள் ஒளிந்திருக்கும்

என் இதயத்தின் திறவுகோல்
கண்டெடுக்க -
யாருக்குத் தெரியும் ?
கண்மணியே உனையன்றி
யாருக்குத் தெரியும் ?



Friday, January 20, 2017

பயணம்

கடும்பாதை
நெடும்பயணம்
கொடுஞ்சுமை

கொதிக்கும் மணல்
கொப்பளித்த பாதங்கள்
வறண்ட கண்ணீர் குளம்

தயைதண்ணீர் கேட்கும்
திராணியில்லை
நிழல்யாசகம் வேண்டும்
நினைப்பேயில்லை

யார் வந்தாலென்ன
யார் போனாலென்ன
நிற்காதிந்த பயணம்

அடுத்த அடி எடுத்து வைக்க
தீராத்தனிமை துணையிருக்கும்
உயிர்போன பின்னாலே ஓய்விருக்கும்