Friday, October 27, 2017

பிராயச்சித்தம்

இருபதாம் வயதிற்கெல்லாம்
மூன்று குழந்தைகளை 
பெற்றெடுத்தபின்
விதவைக்கோலம் பூண்டு
எண்பது வயதுவரை
வாழ்ந்து நொந்தாள்
கொள்ளுப்பாட்டி.

வாழ்நாளெல்லாம்
கணவனின் கையை எதிர்பார்த்து
பின் மகன்களின் கையை எதிர்பார்த்து
தீரா கனவுகளின் சுமையோடு
கண்மூடினாள்
பாட்டி.

தள்ளாடும் கணவனிடம்
போராடித் தோற்று
பின் தன்னந்தனியாய்
பிள்ளைகளைக் காக்க
பெரும்யுத்தம் நடத்தி
கரை சேர்ந்து
துவண்டு விழுந்தாள்
அம்மா.

பாரதியின் புதுமைப்பெண்ணாய்
படித்து வேலை பார்த்து
வீட்டிலும் சுரண்ட
வெளியிலும் சுரண்ட
நாய்பிழைப்பென்று நொந்தாள்
தங்கை.

அதனால்தான் என்னவோ -
ஆண்டாண்டு காலமாய்
ஆண்குலம் இழைத்த பாவத்திற்கு 
சிறு பிராயச்சித்தம்
தேடுவதாய் உணர்கிறேன் -
அயர்ந்து படுத்திருக்கும் 
மனைவியின்
கால்பிடித்து விடும்போது.

No comments: