Thursday, August 19, 2010

எல்லாம் சரியாக அமைந்தவர்கள்

எல்லாம் சரியாக அமைந்தவர்களின்
குடும்பப் புகைப்படத்தில்
அழகான மரவேலைப்பாடமைந்த நாற்காலிகளில்
மூன்று தலைமுறையினர்
கம்பீரமாக வீற்றிருக்கிறார்கள்
அங்கே காலியான அல்லது உடைந்துபோன
நாற்காலிகள் என்று எதுவும் இல்லை

முன்னறிவிக்கப்பட்ட திருப்பங்களோடு
பெரும்பாலும் நேர்கோட்டில் பயணித்து
சுபமென்று முடியும் கதையொன்று
அவர்கள் ஒவ்வொருவர் கையிலும்
வழங்கப்பட்டிருக்கிறது
அங்கே மரணம் கூட
எதிர்பார்க்கப்பட்ட வரிசையில்
நேர்த்தியான விசும்பலோடு நிகழ்கிறது

குளிரூட்டப்பட்ட இரயில் பயணத்தில்
தூக்கத்திற்காக இரவல் வாங்கிய புத்தகம் போல்
அவர்கள் வாழ்க்கைப் புத்தகத்தின்
பளபளக்கும் அட்டைப்பக்கம்
வாசித்துக் கொடுத்துவிடுகிறார்கள்

எதுவுமே சரியாக அமையாதவர்கள் தான்
கசகசக்கும் இரவொன்றில்
மங்கிய வெளிச்சத்தினூடே
களைப்பான கண்கள் கொண்டு
அத்தனை பக்கத்தையும்
படித்துத் தொலைக்கிறார்கள்.