Saturday, September 2, 2006

நீ, நான் - நாம்

எனக்கே தெரியாத என்னை
எப்படியடா நீ மட்டும்
கண்டுபிடித்தாய் ?

என் நினைவெல்லாம் துவண்டுவிழும்
சங்கடப்பொழுதினில்
எனக்குப் பிடித்ததெல்லாம்
எனக்கே ஞாபகப்படுத்தி
என்னைப் பரவசப்படுத்த
எப்படி முடிகிறது -
உன்னால் மட்டும் ?

சத்தமாய் தானே சிரித்திருந்தேன் -
என் கண்ணீர் முகவரிகளை
நீ மட்டும் எங்கிருந்து
கண்டெடுத்தாய் ?

ஊரே மெச்சும்
மேடையெல்லாம் பேசும் - ஆனால்
தப்புத்தப்பாய் நான் போட்ட
கூட்டல் கணக்குகள்
உன் நோட்டுப் புத்தகத்தின்
கடைசிப் பக்கத்தில்

நீ மட்டுமே அறிந்த இரகசியம் -
நான் மகான் அல்ல

என் கால் பிடிக்கும்
புயலை உனக்குத் தெரியும்
எனைக் காயம் செய்யும்
பூவும் உனக்குப் புரியும்

இதுவரை என்னிடம் அதிகம்
திட்டும் குட்டும் வாங்கியது
நீ மட்டும் தான்

கூட்டமாய் சென்றோம்
அந்த மரத்தின் பூக்களையே
மணிக்கணக்காய் நான்
பார்த்திருந்த போது
என்னோடு இருந்தது
நீ மட்டும் தான்

இதனால் மட்டுமல்ல -
என் வலிகளை
உன் விழிகளும்
சுமப்பதால் தான் சொல்கிறேன் -
நீ என் நண்பன்

நீ, நான் - நாம்
போதுமடா இந்த பூமிக்கு

/1998

No comments: