Friday, August 18, 2006

காய்ந்த சுவடுகள்

பாதத்தின் மென்மை
பாதைக்குப் புரிவதில்லை


பாறை உயிரற்றது
பாலை மணல் உயிரற்றது
காய்ந்த முட்களும் உயிரற்றவை
பிணங்களே பாதையானால்
மனங்களுக்கு மதிப்பேது ?

பாதத்தின் மென்மை
பாதைக்குப் புரிவதில்லை

என் கண்கள் கரைந்திருக்கின்றன
என் கால்கள் தளர்ந்திருக்கின்றன
என் கைகள் காற்றில் வெறுமனே துழாவுகின்றன
என் இதயத்துடிப்பை அடிக்கடி நானே
சோதித்துப் பார்க்கிறேன்

பாதத்தின் மென்மை
பாதைக்குப் புரிவதில்லை

என் உயிர் வலிக்க ஒப்புக்கொள்வேன்
ஆனால் -
நான் சிரித்தாலே மலர்ந்து விடும்
என் தோட்டப்பூக்கள்
பொசுங்கி விடப் பொறுப்பதெப்படி ?
பொறுத்தேன்

பாதத்தின் மென்மை
பாதைக்குப் புரிவதில்லை

பாறையில் கால் இடறி
பாலையில் விழுந்தேன்
விழுந்த இடமெல்லாம்
காய்ந்த முட்கள்
என் ஆறறிவில் ஓரறிவு
இடம் பெயர்ந்து போனது - பாறையால்.
என் சிறகுகளெல்லாம்
சருகாயின - பாலையால்.
என் இதயத்தின் எல்லா அறைகளும்
அறுபட்டு போயின - முட்களால்.
பிணமானேன் நான்,
பிணங்களால் நான் பிணமானேன்.

எழுந்துவிட முயற்சித்ததுண்டு - ஆனால்
எழும்போதெல்லாம் வீழத்தான் வேண்டுமென்றால்
வீழும்போதெல்லாம் உயிர்கொண்டு எழுவானேன் ?
பிணமாய் கிடந்தேன்

திடீரென்று -
ஒரு பாதம் என் மீதேறிச் சென்றது
எதிர்பார்க்கவே இல்லை -
என் உடலெங்கும்
இரத்தச் சுவடுகள்

சுவடுகளின் சொந்தக்காரன்
சுருக்கமாய் சொன்ன வார்த்தைகள் -
"கரைகின்ற கண்களுக்கு
காட்சிகள் தெரிவதில்லை.
நிமிர்ந்து நில் - உலகம் தெரியும்.
தெளிந்து நில் - உலகம் புரியும்"

ஏதோ புரிந்தது போல் எழுகிறேன்
மீண்டும் அழுகிறேன் - ஆனால்
இம்முறை எழுகின்ற கண்ணீரை
இதயத்துள் சேமிக்கின்றேன்.
ஆதலின் தெளிவான கண்கள்.

என் முன்னால் பார்க்கிறேன்
தூரத்துப் பச்சை தெளிவாய் தெரிகிறது.
ச்ற்றே திரும்பிப் பார்க்கின்றேன் -
என் கால் இடறிய கற்களெல்லாம்
கற்சிலைகளாய் உருப்பெறுகின்றன.
என் பாலை மணல் முகடு
நிலா மழையில் நனைகிறது.
என் முட்களைச் சுற்றியெங்கும்
முகம் மலர்ந்த ரோஜாக்கள்.

என் நெஞ்சத்தின் ஆழம் வரை
அப்பிக்கிடந்த ஈரச்சுவடுகள்
காய்ந்திருந்தன.
இதோ தயாராகி விட்டது -
இன்னொரு இரத்தச் சுவடு.


/1997

Notes:
If I remember correctly, this is my first kavidhai. It wasn't easy :)

2 comments:

AKV said...

Hey... I don't think I have read this before. This poem written in 1997 - at the age of 17 tells more about your person experiences.. Miga urukkamana Ondru !!!

-ganeshkj said...

Hey Anand,

I think it shouldn't matter if I reflect only my personal experiences in a kavidhai or not. The questions I would ask you are - does this kavidhai make any sense to you ? Do you accept the state of confusion and state of resolution depicted in this kavidhai ? Do they help ?

Only that matters. Analyse the effect and not the cause, dude :)