Wednesday, August 16, 2006

தென்றல் வரும் வேளை

உன் பாதம் தன் மேல் பட்ட சந்தோஷத்தில் உற்சாகக் கூச்சல் போட்டிருக்க வேண்டும் அந்தப் பாதை. உன் காலடி ஓசையை இங்கிருந்தே நான் கேட்கிறேன். இதோ, மிக அருகில்.

இன்னும் சற்றைக்கெல்லாம் என் மனக்கதவை நீ வந்து தட்டப் போகிறாய். உன்னை வரவேற்கத் தயாராகிறேன். என்னவெல்லாம் செய்யப் போகிறாய் நீ ?

உனக்கு சிரமம் தராமல் இப்போதே என் கதவுகளைத் திறந்து வைத்துவிடவா ? இதுவரை அப்படிப் பழக்கமில்லை எனக்கு. இருந்தாலும் இப்போது கதவுகளை நோக்கி ஓடுகின்றேன்; அவற்றை திறக்க எத்தனிக்கின்றேன் - பொறு, பேசலாம்.

உன்னை இதற்கு முன் நான் பார்த்ததில்லை - எப்படி இருப்பாய் நீ ? என்ன பெயர் ? நான் ஒரு பெயர் வைத்தேன் உனக்கு; சொல்கிறேன்.

உன்னைப் பார்த்ததில்லையே தவிர, உணர்ந்திருக்கின்றேன். பெருங்கூட்டத்தில் மிக எளிதாக நான் தனிமைப்படும்போது, சற்றே நான் மனச்சோர்வு அடைவதற்குள், ஓடி வந்து என்னோடு கைகோர்த்துக் கொள்கிறாய்.

இரயில் பயணத்தில் மழைச் சன்னலில் கவிதை எழுதி முடிக்க, அதை எனக்கு வாசித்துக் காட்டுகிறாய்.

பச்சைக்கம்பளப் புல்வெளியில் வாழ்க்கையே புரிந்தது போல் மனம் விரியும் பொழுது, அருகினில் அமர்ந்து கொண்டு என் தோளோடு தலை சாய்த்துக் கொள்கிறாய்.

நிசப்தச்சந்தடியில் மனதெல்லாம் பரபரக்க நினைவெல்லாம் திசை தொலைத்துத் தடுமாறும்போது, என் மேல் விழுந்த ஒற்றைப் பூவில் பேரமைதி தந்து விடுகிறாய்.

இப்படியாக, உன்னைப் பார்த்ததில்லையே தவிர, உணர்ந்திருக்கின்றேன். எங்கோ இருந்தாலும் என் மனத்தின் உள் உணர்வை அறிந்தவளாய், அவற்றின் உருவம் தாங்கி வருவாயா ?

நீ வந்து சேரும் இடம் - ஒரு பூந்தோட்டம், இருக்க வேண்டிய இடம். இங்கு தான் நெடுங்காலம் நான் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தேன். நடப்பதெல்லாம் என்னவென்று புரிந்து, ஏன் என்று புரியாத வரையில் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தேன்; அது புரிந்ததும், நிறுத்திக் கொண்டேன்.

பூக்களுக்காக ஏங்காமல், வேர்களைப் பார்த்த வைராக்கியத்தில் நான் வியர்வை சிந்தத் தொடங்க, அவற்றில் பூத்தவை தான் - வரவேற்பறையில் இன்று நீ பார்க்கப் போகும் ஒரு சில பூக்கள். பூக்களின் வாசம் அறையை நிறைத்திருக்க, வேர்களின் இறுக்கம் மட்டும் இன்னும் நீங்காமல் மனதில்.

உன் பிள்ளைமுகச் சிரிப்பில், என்னைப் புரிந்ததை எனக்குச் சொல்லும் உன் விழிகளில், உன்னைப் புரிந்ததை நான் உனக்குச் சொன்ன வெட்கப் பூரிப்பில், நம் அன்பின் நெகிழ்தலில் - இங்கு இன்னும் பல கோடிப் பூக்கள் பூக்கச் செய்யலாம். அன்று வரும் தென்றல், நம் தோட்டப்பூக்களின் தலைகோதி விளையாட.

இப்போது கதவு தட்டப் படும் ஓசை கேட்கிறது. மெதுவாய் சென்று கதவுகளைத் திறக்கின்றேன். கண்மணீ !

/30 June, 2006.

2 comments:

Anitha Jayakumar said...

romba azhagana description. rombavum abstracta illama... rombavum purinjudama... kai pidithu nadai payilvadhu pola menmaya irundhudhu... good one...

AKV said...

Sensational !!!... Once again you have proved your ability to express the most sensisitve feelings with the most delicate words.. Keep going !!!