Tuesday, August 15, 2006

கனவுகள் தேவை

நிஜம் - ஒரு முரடன்
அவன் வலியவன்

நான் சிரித்தால்
அவன் சொக்கிவிடப் போவதில்லை
நான் அழுதால்
அவன் கரைந்துவிடப் போவதில்லை
அவன் - ஜடம்.

நான் விரும்பி
அவனை அழைத்ததில்லை
நான் விரும்பினாலும்
அவன் போவதில்லை
அவனை போகச் சொல்லியும் பயனில்லை
அவன் - செவிடன்.

சாதுவைப் போல் என்னிடம் நடிப்பான்
கைபிடித்தென்னை அழைத்துச் செல்வான்
பூக்களைக் காண்பிப்பான்
என் மனதை இழுத்து வந்து
அதன் மேல் இருத்தி வைப்பான்
சில நாழிகை கூட கழிந்திருக்காது
எங்கிருந்தோ முள்ளெடுத்து
பூக்களைக் கிழித்தெறிந்து
"போகலாம் வா" என்பான்.

ஏதேதோ எடுத்து வந்து
எல்லாம் என்னிடம் தருவான்
எனக்கும் சிறகுகள் கொடுத்து
வானத்தை விரித்து வைப்பான்
மறந்தும் நான் சிரித்து விட்டால்
என் விழிகளுக்கு சுமை கொடுத்து
உரக்கக் கூச்சலிடுவான்.

அவன் மூடன் -
எனைத் தோற்க வைப்பான்.
துவண்டு நான் கிடக்கையிலே
மீண்டும் எனைத் தோற்க வைப்பான்.

உணர்வுகள் ரணமாயின
மருத்துவனாய் நடித்தான் -
வடு கூட வலி சொன்னது.

எத்தனை நாள்,
இன்னும் எத்தனை நாள் இவனோடு ?
முடிவெடுத்தேன்
நிஜத்தை என் எண்ணம் போல் செதுக்கி
சின்னச் சின்னக் கனவுகளில்
நிறைத்து வைத்தேன்.
கனவுகளைப் ப்ற்றிக் கொண்டேன்.

நிஜத்தோடு போராட
நிஜத்தோடு போராட
இன்னும் கனவுகள் தேவை.

/1999

3 comments:

Anonymous said...

This one is wonderful !!!

Anonymous said...

This one is great buddy!!!

Anitha Jayakumar said...

//வடு கூட வலி சொன்னது//

superb!!!