Monday, August 14, 2006

நன்றியுரை

நன்றி என் நண்ப,

உணர்வோடு ஒட்டாத
வெறும் சப்தங்களையே
வார்தைகளாய் நம்பி
நான் தலையசைத்துக்
கிடந்த போது -

நீ தான் நீ தான்
கற்றுத் தந்தாய்

சில ஆழமான மௌனங்களின்
அழுத்தமான வார்த்தைகளைப்
புரிந்து கொள்ள.

நன்றி என் நண்ப,

யாரோ தந்த தொடக்கத்தில்
காற்றிலே வரைந்ததையெல்லாம்
கனவிலே
நான் வைத்த போது

நீ தான் நீ தான்
உணரச் செய்தாய்

என் ஓலைக்குடிசை வழியே
ஊடுவி வந்து விழும்
ஒற்றை ஒளிக்கற்றையின்
வெப்பத்தை.

நன்றி என் நண்ப,

பூக்களையே பார்த்துப் பார்த்து
அழகை நான்
வியந்த போது

நீ தான் நீ தான்
காணச் செய்தாய்

ஏதோ ஓர் ஆழத்தில்
எங்கோ முடியும் பயணத்தில்
தன்னைச் சிதைக்கும்
வேர்களின் வியர்வையை.

நன்றி என் நண்ப,
நீ தான் என் சொந்தம்
நீ தான் என் சொத்து
உன் பெயர் -
சோகம்.

/1999

No comments: