Saturday, September 30, 2006

ஒர் விடுமுறை நாளில்

நாளை ஒருநாள் விடுமுறை
இன்று புதிதாய் பிறந்தோம்
உற்சாகமாய் ஓடி வா நண்பனே !

கடிகாரத்தின் இடியோசை
தடிகொண்டென்னை எழுப்ப
அவசரமாய் எழுந்து
அவசரமாய் வாழ்ந்து
அவசரமாய் சாக
என்க்குச் சம்மதமில்லை

சென்று விடலாம் நண்பனே
வாகனப்புகைச்சலில் இருந்து
விஞ்ஞான இரைச்சலில் இருந்து
எங்கே வயல் எங்கே நதி
எங்கே மலை - அங்கேயே
சென்று விடுவோம்

அதோ அந்த நதி
பாறையின் காதுகளில்
ஏதோ கிசுகிசுக்கிறதே -
என்னவென்று கண்டறிவோம் வா !

மரம் விட்டு மரம் தாவி
நலம் விசாரிக்கும்
குரங்குகளோடு குதிதாடுவோம் வா !

அந்த அணில்களின்
ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வோம்
ஆறுதல் பரிசு மட்டும்
கிடைத்தாலும் ஆனந்தமே !

அந்த தாய்பறவை தன் குஞ்சுகளுக்கு
பறக்க கற்றுத்தருவதை பார் -
பறவைகளோடு பறந்து திரிய
பறவைகளிடமே பாடம் படிப்போம் வா !

அங்கு பார்த்தாயா
அந்த இலை காற்றில்
அசைந்து அ..சை..ந்..து
ஏதோ எழுதுகிறதே
என்னவென்று கண்டறிவோம் வா !

அதற்குள் முடிந்து விட்டதா நண்பனே..
வைகறை காலை நண்பகல் எற்பாடு எல்லாம் ?
பரவாயில்லை
பாக்கி இரவு பத்திரமாய் இருக்கிறது
நிலவைத் தலையணையாக்கி
நட்சத்திரங்களைப் போர்வையாக்கி
தென்றலை வெண்சாமரம் வீசச் செய்து
முதலில் ஒரு முயல்குட்டியை
தூங்க வைப்போம் - பின் அதன் காலடியில்
கண் துயில்வோம்.
கனவிலும் வலம் வரட்டும்
நம் விடுமுறை சொர்க்கத்தின் வாசனை.

நாளை முதல் மீண்டும் நாம்
எந்திர எச்சங்கள்.

/1997

1 comment:

MSK / Saravana said...

கவிப்பேரரசு வைரமுத்துவின் தாக்கம் தெரிகிறது..