Sunday, September 17, 2006

கண்டேன்

கரடுமுரடாய் நானிருப்பேன் -
மென்மையைக் கற்றுத் தரும்
பூக்கள் வேண்டும்.

சினத்தால் கொஞ்சம் சீறுவேன் -
கனிவைக் கற்றுத் தரும்
தென்றல் வேண்டும்.

கண்கள் கொஞ்சம் கரைந்திருப்பேன் -
எனை சிரிக்கச் சொல்லும்
பிள்ளைமுகம் வேண்டும்.

வெறும் கல்லாய் கூட நானிருப்பேன் -
என் ஈரம் அறியும்
வேர் வேண்டும்.

இடைவந்த இடரால் வீழ்ந்திருப்பேன் -
எனை பறக்கச் சொல்லும்
சிறகுகள் வேண்டும்.

புயலாய் ஓடிக் களைத்திருப்பேன் -
பூங்குயில் பாடும்
மெல்லிசை வேண்டும்.

இடிபட்டு இதயம் கிழிந்திருப்பேன் -
இதமாய் வருடும்
பூவிதழ் வேண்டும்.

சிந்தை தெளிந்திருந்தும் சரிந்திருப்பேன் -
சுட்டெரித்து உணர்த்தும்
சூரியன் வேண்டும்.

கண்கள் மூடிக் கனவினில் இருப்பேன் -
நிகழ்கால நிமிடச் சத்தம்
நித்தமும் வேண்டும்.

சந்தோஷத்தில் சற்றே சத்தமாய் சிரிப்பேன் -
என் கைகோர்தாடும்
கார்மேகம் வேண்டும்.

முதிர்வினில் தளர்நடையிட்டே செல்வேன் -
என் பாதம் அறியும்
பாதை வேண்டும்.

முடிவினில் மண்சுவைக்க முடிந்திருப்பேன் -
என்மேல் பனித்துளி வார்க்கும்
பூக்கூட்டம் வேண்டும்.

நான்முகனே நான்முகனே
நான்கு திசை நாயகனே
நாலிரண்டு செவியாலும்
நல்லபடி கேட்டாயா ?
வேண்டியதைச் சொல்லிவிட்டேன்
சொன்னபடி தருவாயா ?
கேட்டேன் -
கேட்டதைத் தந்தான்.
தந்ததைக் கண்டேன்.
பெண்.

/1998

2 comments:

Anitha Jayakumar said...

kadaisi wordkkaga ve indha kavidhaiya thirumba thirumba padikkalam... evlo powerful vaarthai... PenN... correcta use pannirukeenga...

AKV said...

"பெண்" - Your expectations are too high buddy. Its not easy to find a girl with the qualities you had listed there.

Pala "பெண்" kal "penmaiyai" illanthu vittathai ariyamalayae vazhndhu kondu irukkiraargal !!!.