Saturday, March 17, 2007

கண்ணுக்குத் தெரியாத மேடை

எல்லா சுதந்திரதினத்திற்கும்
தவறாமல் மேடையேறி
ஆனந்த சுதந்திரம் அடைந்த மகிழ்ச்சியில்
குறுகுறுக்கும் ஒட்டுமீசையை
கம்பீரமாக முறுக்கிக் கொள்வான்
என் பள்ளி பாரதி.

மைதீட்டி திலகமிட்டு அக்காவின் கொலுசணிந்து
'தீராத விளையாட்டுப் பிள்ளை' பாடி
நேற்று பழகிய வெட்கத்தோடு
பார்வையாளர் கூட்டத்தில் தன் கண்ணனைத் தேடி
எப்படியும் பரிசோடு தான் திரும்புவாள்
என் சின்ன இராதை.

குச்சிக் கைகளில் அட்டை வாள்சுழற்றி
தன் புஜபல பராக்கிரமங்கள் பேசி
நடிகர் திலகத்து பெருமூச்சுவிட்டு
நாடக முடிவினில் மனம்திருந்தி
கைத்தட்டல் வாங்குவான்
என் முரட்டு மன்னன்.

இன்றோ கண்ணுக்குத் தெரியாத மேடைகளில்
யாரும் காணக் கலைந்திடாமல்
நேர்த்தியாய் போடும் பல வேடங்கள்
அன்று போல் இல்லாமல்
வெறும் உறுத்தல்களையே
பரிசாகத் தருகின்றன.

/17th March, 2007.

2 comments:

Jana said...

இன்றோ கண்ணுக்குத் தெரியாத மேடைகளில்
யாரும் காணக் கலைந்திடாமல்
நேர்த்தியாய் போடும் பல வேடங்கள்
அன்று போல் இல்லாமல்
வெறும் உறுத்தல்களையே
பரிசாகத் தருகின்றன.//

இந்த முரண்பாடு உண்மையின் வெளிப்பாடு !!! அருமை!

Dr.Ganesh Prasad said...

chanceless..the real JGK stuff..