Thursday, March 1, 2007

பூக்களை நேசித்தவன் கதை

தன் தாயின் உள்ளங்கைப் பற்றுதலில்
தான் பெற்ற அன்பும் அமைதியும்
பூக்களில் நிறைந்து நின்று
நித்தமும் சிரிக்கக் கண்டு
பூக்களோடு அவன்
தீராத காதல் கொண்டான்.

மனத்தின் வெளிப்பிரவாகமோ
ஆழ்ந்த உள்இடுக்குகளோ
பூக்கள் வேண்டாத இடமே இல்லையென்று
பூமியே பூத்துக் குலுங்க எண்ணி
தன் வீட்டுத் தோட்டத்திலிருந்து
அவன் தொடங்கினான்.

பூக்களின் இதழெங்கும் கவிகள் எழுதி
பூமணத்தில் காற்றோடு கலக்க விட்டான்.

இன்னொரு நாளுக்கான நம்பிக்கை
பூக்களில் மட்டுமே ஒளிந்திருக்கக் கண்டு
பரவசமடைந்த அதே வேளையில் தான்
பூக்களைக் கிழித்துக் குதறி
தின்றுயிர்க்கும் பிராணிகளும்
உண்டென்பதை அவன் அறிந்தான்.

தன் பூக்களைக் காத்துக் கொள்ள
வெறிகொண்டு பிராணிகள் பின்னே
விரட்டிச் சோர்ந்துடைந்து
கண்ணீர் விட்டான்.

பூக்களோடு வாழ நினைத்தவன் அன்றுமுதல்
முட்களைச் சிந்திப்பதிலே
முட்களைச் சேகரிப்பதிலே
வாழ்வைத் தொலைத்துவொரு
முள்வேலி செய்து முடித்து
மாண்டு போனான்.

அவன் செய்த வேலிக்குள் யாரேனும்
இனி பாதுகாப்பாய் பூக்கள் வளர்க்கலாம்.
அன்று பூத்துச் சிரிக்கும் பூக்களிலும்
அவன் எழுதிய கவிகள் இருக்கலாம்.

/1st March, 2007

No comments: