Thursday, August 13, 2009

தடயங்களை அழித்தல்

தினமும் அலுவலகம் செல்லும் வழியில்
இருபுறமும் வரிசையாக கைகோர்த்து
புன்னகைத்து வழியனுப்பும் மரங்களை
சாலை மேம்பாட்டுப் பணிகளின் பேரில்
வெட்டத் தொடங்கியிருந்தார்கள்.

சடசடவென சிலநாட்களில் வீழ்த்தப்பட்டு
வரிசையில் கடைசியாக
ஒரு மரம் மட்டும் தப்பிப் பிழைத்தது.

எஞ்சியிருந்த ஒற்றை மரம்
தாங்கவியாலா தன் இருப்பின் அவஸ்தைகளை
காற்றினில் கவிதைகளாக
ஒரு கொலைக்களத்தின் தடயங்களை
திருச்சபை முன் முறையீடாக
வருவோர் போவோரிடம்
அரற்றிக் கொண்டிருந்தது.

போக்குவரத்து நெரிசலில்
எரிச்சலோடு விரல்கள்
ஹாரனை அழுத்திக் கொண்டிருந்தன.

இளநீர் விற்பவன்
இந்த மரத்திற்கு
இடம் மாறியிருந்தான்.

1 comment:

Anitha Jayakumar said...

chancea illa... last line che nu solla vechuduchu..