Sunday, December 27, 2009

அம்மாவைக் காணக்கிடைத்தல்

நினைவு தெரிந்த நாள் முதலாய்
எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்கும்
அம்மாவைத் தான் பார்த்திருக்கிறேன்

'கழுத்தில் மாலை விழுந்த நாளிலிருந்து'
இந்த ஓட்டம் தொடங்கியதாக
அம்மா நினைவுகூர்வதுண்டு
கண்ணீரோடும்
சில நேரம் சிரிப்போடும்

இன்று அவள் சுமைகளை இறக்கி
கைத்தாங்கலாக
இரயிலில் இருந்து அழைத்து வந்து
குளிருக்கு கம்பளி போர்த்தி
பகல்நேரம் அயர்ந்து உறங்கும்
அம்மாவைக் காணக்கிடைத்திருப்பது
ஆறுதலாக இருக்கிறது

பயமாகவும் இருக்கிறது

No comments: