Friday, January 6, 2012

உன் குறுஞ்செய்தி

தடித்த வார்த்தையொன்று
நம்மிடையே வந்து விழ
இறுக்கமான முகத்தோடு
இல்லாத காரணம் சொல்லி
உன் அம்மா வீட்டிற்குப் போகிறாய்

போகட்டுமே என்றிருந்த பிடிவாதம்
இருநாட்களுக்குள் மூச்சடைத்துப் போனது

நீயில்லாத நம் வீடு
என் மீது கோபித்து முகம் திருப்பிக் கொள்ள
சூழ்ந்த வெறுமையில்
நிராயுதபாணியாய் நிற்கின்றேன்

சற்று பார்வை மங்கி
இலக்குகள் தெரியாத தடுமாற்றம்

நிலைகொள்ளாமல் தள்ளாடும் மனது
எங்கோ இருளில் முட்டி நிற்கிறது

இது போதாதென்று இரவெல்லாம்
மோகினிப்பேய்களின் அட்டகாசம்

அங்கென்ன நிகழ்ந்ததோ
ஒரு வழியாக மெளனம் கலைந்து
"சாப்டாச்சா" என்ற ஒற்றைச் சொல்லோடு
வந்து சேர்கிறது உன் குறுஞ்செய்தி

மடை திறந்த வெள்ளம் போல்
மீண்டும் நான் உயிர்த்தெழுந்து
தாயே உன் மடியில் விழுந்தேன்.

1 comment:

AKV said...

அப்படி வா !!! வழிக்கு !!!.. :-)

On a Serious note,
இடைவெளிகள் எப்போதுமே வேண்டபடாதவை அல்ல !!!... அவை நம்மை நாமே உணரவும் உதவும் !!!