Wednesday, April 4, 2007

எ.பி.சு.ரா.க - 6

ஒரு கவிதையை எப்போது நமக்குப் பிடிக்கின்றது ? நாம் உணர்ந்ததையே அது அழகான வார்த்தைகளில் விளக்கிச் சொல்லி நம்மோடு தோழைமை பாராட்டும்போதா ? நாம் இதுவரை அறிந்திராத ஒன்றை அது உணரத்தரும்போதா ? இல்லை சதா நம்முள் அழுத்திக் கொண்டிருந்தாலும் என்னவென்றே நம்மால் இனம் காணமுடியாத ஒன்றை இது தான் அது என்று உருவம் தந்து நம்முன் நிறுத்தும்போதா ? ஏதோ காரணத்தினால் சுந்தர ராமசாமியின் உருக்கமான, தலைப்பில்லாத இக்கவிதை மனதைத் தொட்டது.

~~~~~~~~
என் துக்கத்திற்கு விடுமுறை இல்லை என்பதறிவேன்
இருப்பினும் அது சற்றுத் தூங்கினால்
நானும் சற்றுத் தூங்க முடியும்
அதன் விழிப்பு என்னை வதைக்கிறது
சற்று விட்டுப் பிடி என்று சொல்லவும் எனக்குத் தெரியவில்லை
இருந்தாலும் இப்போதும் சிரிக்க முயல்கிறேன்

என் துக்கத்திற்கு விடுமுறை இல்லையென்பதை உணர்ந்துவிட்டேன்
இருந்தாலும் அது சற்று ஓய்வெடுத்துக் கொண்டால்
அந்நேரம் நானும் ஓய்வெடுத்துக்கொள்ள முடியும்
தூங்கினால் நானும் தூங்க முடியும்
இருப்பினும் சிரிக்க முயல்கிறேன்
சில சமயம் வெளியே போகிறேன்
இனம்கூற முடியாத ஏதோ ஒன்று நெற்றிப்பொட்டை
சதா தாக்கிக்கொண்டிருக்கிறது
சுமை களைந்து நிற்க மனம் ஏங்குகிறது
மாலையில் சூரியன் மறையும்போது
தனி அறையில் அமர்ந்திருக்கிறேன்
இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்கிறேன்
என்னைத் தவிர இங்கு வேறு எவருமில்லை
எனச் சொல்லிச் சிரிக்கிறது துக்கம்.
- சுந்தர ராமசாமி, 24.1.1995
~~~~~~~~~

No comments: