Showing posts with label உறவுகள். Show all posts
Showing posts with label உறவுகள். Show all posts

Wednesday, October 25, 2006

தேங்கிக் கிடப்பவை

மலர்ந்த தருணம் எதுவென்று அறியவில்லை
அத்தனை இதழ்களிலும் தெளிவான அழகு
வலிக்குமோ என்றபடி தயங்கித்திரளும் பனித்துளி
சுற்றிலும் அமைதியோடிழைந்த நறுமணம்
அப்படித்தான் உணர்ந்ததாய் ஞாபகம்
என் நினைவறையில் முதன்முதலாய்
சேர்த்து வைத்த உன் பிம்பத்தை.

சில பரிட்சயங்கள் கடந்து
என்னில் தன் ஆளுமை உறுதியானபின்
அவ்வப்போது உன் பிம்பம்
இறுகிக் கனத்து சுதாரித்து இயல்பானதில்
எழுந்த என் தத்தளிப்பை
சிரித்து மழுப்பி பழகிக்கொண்டேன்.

காலச்சூட்டில் மயக்கங்கள் விலகி
விழுந்த வெளிச்சத்தில்
உன் பிம்பத்தின் விகாரம் ஓங்கி வளர
பற்றிக்கிடந்த என் நினைவுகள்
மூர்ச்சையடைந்து விழுந்தன.

காணக்கிடைக்காமல்
உன் பிம்பம் கலைந்துபோய்
காலம் வெகுவாகிப் போனாலும்
என் நினைவறையில்
இன்றும் தேங்கிக் கிடக்கின்றன -

அந்த இதழ்களின் நறுமணமும்
நீ சொறுகிய வார்த்தையில்
சொட்டும் என் இரத்தமும்.

/25 Oct, 2006

Sunday, October 8, 2006

அவர்கள்

சிகரம் ஏறி சிறகு விரித்து
உயரப்பறந்து வானுயரப்பறந்து
மேகம் கடந்து மேனி சிலிர்த்து
கண்கள் மூடி உள்ளம் விழிக்க
பாவம் இது பசிமயக்கம் எனச்சொல்லி
தெருவோரம் சீட்டெழுதித் தந்தார்கள்.
கூழுக்கு வரிசை கட்டி
கும்பிடச் சொன்னார்கள்.

வேண்டாத ரோமங்கள் எனக்காட்டி
என் சிறகுகளைச் சிரித்தார்கள்.

எண்ணங்கள் செதுக்கியொரு சிலைவடிக்க
எத்தனைக்கு விலைபோகும்
என்று மட்டும் கேட்டார்கள்.

சின்னச்சறுக்கல்களில் உணர்வுகள்
சிராய்த்து நோகும் போது
உள்ளம் பகிர்ந்து கொள்ள ஓர்
உறவுக்கரம் தேட
புண்ணியம் சேர்க்க வழியாச்சு
எங்கே உன் பிச்சைப்பாத்திரம் என்றார்கள்.

எத்தனை முயன்றாலும்
சொல்லிப் புரிவதில்லை என்பதால்
புன்னகைத்து அவர்களைக் கடக்கின்றேன்.
பசிமயக்கம் போய் இப்போது பார்
தின்ற கொழுப்பு என்கிறார்கள்.

/8th Oct, 2006

Saturday, September 2, 2006

நீ, நான் - நாம்

எனக்கே தெரியாத என்னை
எப்படியடா நீ மட்டும்
கண்டுபிடித்தாய் ?

என் நினைவெல்லாம் துவண்டுவிழும்
சங்கடப்பொழுதினில்
எனக்குப் பிடித்ததெல்லாம்
எனக்கே ஞாபகப்படுத்தி
என்னைப் பரவசப்படுத்த
எப்படி முடிகிறது -
உன்னால் மட்டும் ?

சத்தமாய் தானே சிரித்திருந்தேன் -
என் கண்ணீர் முகவரிகளை
நீ மட்டும் எங்கிருந்து
கண்டெடுத்தாய் ?

ஊரே மெச்சும்
மேடையெல்லாம் பேசும் - ஆனால்
தப்புத்தப்பாய் நான் போட்ட
கூட்டல் கணக்குகள்
உன் நோட்டுப் புத்தகத்தின்
கடைசிப் பக்கத்தில்

நீ மட்டுமே அறிந்த இரகசியம் -
நான் மகான் அல்ல

என் கால் பிடிக்கும்
புயலை உனக்குத் தெரியும்
எனைக் காயம் செய்யும்
பூவும் உனக்குப் புரியும்

இதுவரை என்னிடம் அதிகம்
திட்டும் குட்டும் வாங்கியது
நீ மட்டும் தான்

கூட்டமாய் சென்றோம்
அந்த மரத்தின் பூக்களையே
மணிக்கணக்காய் நான்
பார்த்திருந்த போது
என்னோடு இருந்தது
நீ மட்டும் தான்

இதனால் மட்டுமல்ல -
என் வலிகளை
உன் விழிகளும்
சுமப்பதால் தான் சொல்கிறேன் -
நீ என் நண்பன்

நீ, நான் - நாம்
போதுமடா இந்த பூமிக்கு

/1998

Tuesday, August 15, 2006

பிரிவு - 1

பிரிவென்ற பேதைமையை
திருத்து.

ஏனெனில்
உன்னையும் தான்
எடுத்துப் போகிறேன் -
என்
விழித்திரை ஓவியமாய்.

/2001

பிரிவு - 2

பிரிவு தான் இது
பிரிந்து போ

என் விழிகளுக்கு
எட்டாத தொலைவில்
தொலைந்து போ

உன் உலகில்
உன்னைப் பூட்டிக் கொள்
என் பிறந்த நாளை மற
எனக்குப் பிடித்ததெல்லாம் மற
என்னையும் மற

ஆனால்
என்றேனும் என் நினைவுச்சறுக்கத்தில்
விழுந்துருண்டு
நான் மூர்ச்சிக்கையில்
உன் பெயரை மட்டும்
உச்சரிப்பேன்

அன்று மட்டும்
மறக்காமல்
உன்னை அனுப்பி வை.

/2001