Showing posts with label கண்மணி. Show all posts
Showing posts with label கண்மணி. Show all posts

Friday, May 17, 2019

இந்த மரங்கள்

குளித்து முடித்து
ஈரம் சொட்ட
நீ வரும் அழகை
நினைவுபடுத்துகின்றன
மழையில் நனைந்த
ஈரம் காயாத
இந்த மரங்கள்

Monday, January 22, 2007

ஆசுவாசம்

கண்களை இறுக்கமூடி
கைகளை விரித்து
கால்களை உதைத்துக் கொண்டு
வீறிட்டு அழத் துவங்கிவிட்டது
குழந்தை.

பசியினாலா
பரிட்சயமில்லா முரட்டு முகங்களின்
அன்பில்லாக் குரல் கேட்ட
பயத்தினாலா
இனம் புரியாத வலிகளை
வார்த்தைகளில் சொல்லத் தெரியாத
இயலாமையினாலா

யாருக்கும் தெரியவில்லை.

எங்கோ இருந்த நீ
அழுகுரல் கேட்டதும்
கண்ணீர் மல்க ஓடி வந்து
இருகைகளில் குழந்தையை வாரியெடுத்து
முத்தமிட்டு மார்போடு அணைத்துக் கொள்கிறாய்.

தன் பிஞ்சுக்கரங்களை
உன் கழுத்தோடு கட்டிக்கொண்டு
சாந்தமாய் இப்போது உறங்குகிறது
என் மனதும்.

/22nd Jan, 2007

Tuesday, January 9, 2007

காத்திருத்தல்

விழுந்த மழைத்துளிகள்
மேகம் சேர்ந்து
மீண்டும் கலைகின்றன

பூக்கள் குவிந்து மொட்டாகி
கிளையோடு விதைக்குள்
புதைகின்றன

எழுதிவைத்த என் கவிதையும்
விரல்வழி புகுந்து
மூளைக்குள் மிச்சமின்றி
தொலைந்து விட
நான் மட்டும்
இன்னும் இருக்கின்றேன்

என்றேனும் உன் கவிதையோடு
நீ இங்கு வரக்கூடும்
மண்வாச மழையோடு
பூங்காடு நனையக்கூடும்

/9th Jan, 2007

Thursday, November 9, 2006

Good old days !!


Drawing has also been my passion in my school days. I am not good at water-coloring my drawings. So from past experience, I always prefer to stay with black & white pencil drawing. What remains of my drawing ventures is this sketch, made in 1999. Those College days!! I should thank my good friend for having recovered this sketch, in e-format. Athu Oru Azhagiya Kanaa Kaalam !!

Nowadays this passion has come down to merely spending few minutes glancing through Art books in Higginbothams.

Sunday, September 17, 2006

கண்டேன்

கரடுமுரடாய் நானிருப்பேன் -
மென்மையைக் கற்றுத் தரும்
பூக்கள் வேண்டும்.

சினத்தால் கொஞ்சம் சீறுவேன் -
கனிவைக் கற்றுத் தரும்
தென்றல் வேண்டும்.

கண்கள் கொஞ்சம் கரைந்திருப்பேன் -
எனை சிரிக்கச் சொல்லும்
பிள்ளைமுகம் வேண்டும்.

வெறும் கல்லாய் கூட நானிருப்பேன் -
என் ஈரம் அறியும்
வேர் வேண்டும்.

இடைவந்த இடரால் வீழ்ந்திருப்பேன் -
எனை பறக்கச் சொல்லும்
சிறகுகள் வேண்டும்.

புயலாய் ஓடிக் களைத்திருப்பேன் -
பூங்குயில் பாடும்
மெல்லிசை வேண்டும்.

இடிபட்டு இதயம் கிழிந்திருப்பேன் -
இதமாய் வருடும்
பூவிதழ் வேண்டும்.

சிந்தை தெளிந்திருந்தும் சரிந்திருப்பேன் -
சுட்டெரித்து உணர்த்தும்
சூரியன் வேண்டும்.

கண்கள் மூடிக் கனவினில் இருப்பேன் -
நிகழ்கால நிமிடச் சத்தம்
நித்தமும் வேண்டும்.

சந்தோஷத்தில் சற்றே சத்தமாய் சிரிப்பேன் -
என் கைகோர்தாடும்
கார்மேகம் வேண்டும்.

முதிர்வினில் தளர்நடையிட்டே செல்வேன் -
என் பாதம் அறியும்
பாதை வேண்டும்.

முடிவினில் மண்சுவைக்க முடிந்திருப்பேன் -
என்மேல் பனித்துளி வார்க்கும்
பூக்கூட்டம் வேண்டும்.

நான்முகனே நான்முகனே
நான்கு திசை நாயகனே
நாலிரண்டு செவியாலும்
நல்லபடி கேட்டாயா ?
வேண்டியதைச் சொல்லிவிட்டேன்
சொன்னபடி தருவாயா ?
கேட்டேன் -
கேட்டதைத் தந்தான்.
தந்ததைக் கண்டேன்.
பெண்.

/1998

Wednesday, August 16, 2006

தென்றல் வரும் வேளை

உன் பாதம் தன் மேல் பட்ட சந்தோஷத்தில் உற்சாகக் கூச்சல் போட்டிருக்க வேண்டும் அந்தப் பாதை. உன் காலடி ஓசையை இங்கிருந்தே நான் கேட்கிறேன். இதோ, மிக அருகில்.

இன்னும் சற்றைக்கெல்லாம் என் மனக்கதவை நீ வந்து தட்டப் போகிறாய். உன்னை வரவேற்கத் தயாராகிறேன். என்னவெல்லாம் செய்யப் போகிறாய் நீ ?

உனக்கு சிரமம் தராமல் இப்போதே என் கதவுகளைத் திறந்து வைத்துவிடவா ? இதுவரை அப்படிப் பழக்கமில்லை எனக்கு. இருந்தாலும் இப்போது கதவுகளை நோக்கி ஓடுகின்றேன்; அவற்றை திறக்க எத்தனிக்கின்றேன் - பொறு, பேசலாம்.

உன்னை இதற்கு முன் நான் பார்த்ததில்லை - எப்படி இருப்பாய் நீ ? என்ன பெயர் ? நான் ஒரு பெயர் வைத்தேன் உனக்கு; சொல்கிறேன்.

உன்னைப் பார்த்ததில்லையே தவிர, உணர்ந்திருக்கின்றேன். பெருங்கூட்டத்தில் மிக எளிதாக நான் தனிமைப்படும்போது, சற்றே நான் மனச்சோர்வு அடைவதற்குள், ஓடி வந்து என்னோடு கைகோர்த்துக் கொள்கிறாய்.

இரயில் பயணத்தில் மழைச் சன்னலில் கவிதை எழுதி முடிக்க, அதை எனக்கு வாசித்துக் காட்டுகிறாய்.

பச்சைக்கம்பளப் புல்வெளியில் வாழ்க்கையே புரிந்தது போல் மனம் விரியும் பொழுது, அருகினில் அமர்ந்து கொண்டு என் தோளோடு தலை சாய்த்துக் கொள்கிறாய்.

நிசப்தச்சந்தடியில் மனதெல்லாம் பரபரக்க நினைவெல்லாம் திசை தொலைத்துத் தடுமாறும்போது, என் மேல் விழுந்த ஒற்றைப் பூவில் பேரமைதி தந்து விடுகிறாய்.

இப்படியாக, உன்னைப் பார்த்ததில்லையே தவிர, உணர்ந்திருக்கின்றேன். எங்கோ இருந்தாலும் என் மனத்தின் உள் உணர்வை அறிந்தவளாய், அவற்றின் உருவம் தாங்கி வருவாயா ?

நீ வந்து சேரும் இடம் - ஒரு பூந்தோட்டம், இருக்க வேண்டிய இடம். இங்கு தான் நெடுங்காலம் நான் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தேன். நடப்பதெல்லாம் என்னவென்று புரிந்து, ஏன் என்று புரியாத வரையில் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தேன்; அது புரிந்ததும், நிறுத்திக் கொண்டேன்.

பூக்களுக்காக ஏங்காமல், வேர்களைப் பார்த்த வைராக்கியத்தில் நான் வியர்வை சிந்தத் தொடங்க, அவற்றில் பூத்தவை தான் - வரவேற்பறையில் இன்று நீ பார்க்கப் போகும் ஒரு சில பூக்கள். பூக்களின் வாசம் அறையை நிறைத்திருக்க, வேர்களின் இறுக்கம் மட்டும் இன்னும் நீங்காமல் மனதில்.

உன் பிள்ளைமுகச் சிரிப்பில், என்னைப் புரிந்ததை எனக்குச் சொல்லும் உன் விழிகளில், உன்னைப் புரிந்ததை நான் உனக்குச் சொன்ன வெட்கப் பூரிப்பில், நம் அன்பின் நெகிழ்தலில் - இங்கு இன்னும் பல கோடிப் பூக்கள் பூக்கச் செய்யலாம். அன்று வரும் தென்றல், நம் தோட்டப்பூக்களின் தலைகோதி விளையாட.

இப்போது கதவு தட்டப் படும் ஓசை கேட்கிறது. மெதுவாய் சென்று கதவுகளைத் திறக்கின்றேன். கண்மணீ !

/30 June, 2006.

Tuesday, August 15, 2006

கல்

கல் - இதன் மேல் காக்கை
இன்றும் எச்சமிட்டது.
ஆடு மேய்ப்பவன்
கடந்து செல்லும் போது
கழியால் ஓங்கி அடித்தான்.
நேற்று பெய்த மழைக்கு மிச்சமாய்
ஒட்டிக்கிடந்த ஈரச்சுவடுகள் காய்ந்திருக்க
கரையாமல் கரடுமுரடாய்
கல்.

உணர்வுகளின் வாசம்
அறிந்திருக்க வாய்ப்பில்லை.
காற்றோடு மரங்கள் பேசுவதை
கவனித்துப் பழக்கமில்லை.
இது கல் - வெறும் கல்.
இதன் உடைமை - வெறுமை.

திடீரென்று பூக்களெல்லாம்
மொத்தமாய் திரும்பிப் பார்க்கின்றன -
நீ வருகிறாய்.

அருகினில் அமர்கிறாய் -
உன் சுவாசம் பட்ட வெப்பம்
ஏனோ உறைக்கிறது.

காற்றினில் உன் கூந்தல்
கையெழுத்திடுகிறது -
விழித்துக் கொள்கின்றன கண்கள்.

சரம்சரமாய் சிரிக்கிறாய் -
செவிகள் திறந்து கொள்கின்றன.

பேச ஆரம்பிக்கிறாய் -
மரங்களையெல்லாம்
மெளனிக்கச் சொல்கிறது கல்.

அதிசயமாய் வந்த வெட்கத்தில்
ஏதோ உளறி வைக்கிறாய் -
சிரிக்கவும் செய்கிறது கல்.

உன் கண்கள் பனிக்கின்றன -
கரங்களை செதுக்கிக் கொள்கிறது கல்.

காற்றினில் விழுந்து விட்ட
உன் பூக்களைத் தாங்கிப் பிடிக்கிறது -
மென்மையாகிறது கல்.

ஏனோ நீ வந்த வழியே
சொல்லாமல் போகிறாய்.
நீ விட்டுச் சென்ற வாசத்தை
பூக்களெல்லாம் சிறைபிடிக்க -
உன் காலடி ஓசையை
காற்று வந்து கொண்டு செல்ல -
எல்லாம் போகிறது.

விரக்தியில்
சிரிக்கிறது கல் - யாருக்கும்
செவியில்லை.
அழுகிறது கல் - யாருக்கும்
விழியில்லை.

மீண்டும் மரங்கள் பேச ஆரம்பிக்க
மெளனிக்கிறது கல்.

காக்கை வந்து எச்சமிடுகிறது.
அதோ,
ஆடு மேய்ப்பவனும்
திரும்பி விட்டான்.

கல் நெஞ்சமடி உனக்கு.

/2000

Monday, August 14, 2006

எங்கே போகின்றாய் ?

பழகிப்போன யுத்தக்களத்தில்
இன்றும் இன்றும் விழிக்கின்றேன்
இமையாய் துடிக்கும் இதயம் தேடி
மீண்டும் மீண்டும் தொலைகின்றேன்

என் கண்கள் கனக்கும் காலப்பொழுதில்
கன்னக்குழியோடு வருகின்றாய்
ஒட்டடை கோர்த்த மயிலிறகாக
கொட்டிக் கிடக்கும் நினைவெல்லாம்
எடுத்துக் கொடுத்துப் போகின்றாய்

நினைவுச்சுகத்தில் உறங்கும் மனது
விழித்த உடனே உன்னைத் தேடும் -
எங்கே எங்கே போகின்றாய் ?

/2001

கண்மணிக் கவிதைகள் - 2

தூக்கம் கலைந்த ஒரு பின்னிரவில்
இதழ்கள் குவிந்துறங்கும் உன் முகப்பூவை
இமைக்காமல் பார்த்திருப்பேன் -
கள்ளப் புன்னகை சிந்தி
இன்னும் நீ சிவந்திருப்பாய்.

வேல்விழியோ கூர்விழியோ
சொல்மொழியோ கள்மொழியோ என்றெல்லாம்
கவிதைப் பிதற்றல்கள் செய்வேன் -
மெச்சியென் பொற்கிழியாய் தருவாய்
தலையில் குட்டும் கன்னத்து முத்தமும்.

சேர்த்து வைத்த உன் சிரிப்பாலே
நிரம்பி நான் வழிந்திருக்க இன்றிந்தப் புதுச்சிரிப்பை
எங்குதான் வைப்பதென்பேன் -
சொன்னாலும் கேளாமல்
இன்னுமொன்றைச் சிரித்து வைப்பாய்.

தேக்கி வைத்த ஒளியெல்லாம்
வானிறைக்கும் நிலவிருக்க என் நெஞ்சத்தின்
முள்வலிகள் சொல்வேன் -
கண்ணீர் ஒரு துளி தருவாய் போதும்
என் காயங்கள் வடுவின்றி ஆறும்.

/2004

கண்மணிக் கவிதைகள் - 1

வழிகின்ற கண்ணீரின்
கன்னத்து வழித்தடத்தை
விரல் துளியால்
துடைக்கும் -
மழை.

உடையெல்லாம் சலசலக்க
உடலோடு கட்டிக் கொண்டு
உள்ளம் வரை
வருடிச் செல்லும் -
தென்றல்.

வாழ்கைவழித் திருப்பத்தில்
தொலைத்து வைத்த சிரிப்பெல்லாம்
அள்ளி வந்து
இதழ் நிறைக்கும் -
மழலை மொழி.

நினைவுகளின் சுமை அழுத்தி
இறுக்கம் கண்ட
மனதெல்லாம்
சட்டென்று சிறகாக்கும் -
பூக்கூட்டம்.

இவையோடு இருக்கும் போது
எங்கோ நீ இருந்தாலும் -
உன்னை உணர்கின்றேன்
எந்தன் கண்மணியே !

/oct, 2005