Tuesday, February 9, 2010

நினைவுகளை அணைத்தல்

ஒரு மின்விளக்கை
அணைப்பது போல்
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை
நினைவுகளை அணைப்பது.

என் உறக்கத்தடமெங்கும்
குதிரைக்குளம்பொலியாய்
ஒலித்துக் கொண்டேயிருக்கும்
இந்த நினைவுகளை
இறுக்கிப் பிடித்து நிறுத்த
இரவின் வீதியெங்கும்
அதன் பின்னலைகின்றேன்.

நினைவுகள்
எண்ணங்களைப் பிறப்பிப்பதும்
எண்ணங்கள்
நினைவுகளைத் திசைதிருப்புவதுமாக
தொடரும் உங்கள் விளையாட்டை
வேடிக்கை பார்ப்பதைத் தவிர
வேறொன்றும் வழியறியாத நான்
ஒன்று மட்டும் உங்களைக் கேட்கின்றேன் -

ஒரு மின்விளக்கை
அணைப்பது போல்
மிகஎளிதாக இந்த உடல் அணையும் போது

எந்தத் திருவடியில் விழுந்து
நீங்கள் செத்தொழிந்து போவீர்கள்?

Sunday, December 27, 2009

அம்மாவைக் காணக்கிடைத்தல்

நினைவு தெரிந்த நாள் முதலாய்
எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்கும்
அம்மாவைத் தான் பார்த்திருக்கிறேன்

'கழுத்தில் மாலை விழுந்த நாளிலிருந்து'
இந்த ஓட்டம் தொடங்கியதாக
அம்மா நினைவுகூர்வதுண்டு
கண்ணீரோடும்
சில நேரம் சிரிப்போடும்

இன்று அவள் சுமைகளை இறக்கி
கைத்தாங்கலாக
இரயிலில் இருந்து அழைத்து வந்து
குளிருக்கு கம்பளி போர்த்தி
பகல்நேரம் அயர்ந்து உறங்கும்
அம்மாவைக் காணக்கிடைத்திருப்பது
ஆறுதலாக இருக்கிறது

பயமாகவும் இருக்கிறது

Monday, December 7, 2009

பைத்தியக்காரன்

திட்டங்கள் தீட்டி
வியூகம் வகுத்து
நேர்த்தியாய் பேசி
நேரம் பார்த்து தாக்கி
வேண்டிய அளவு குழைந்து
இடம் பார்த்து குரலுயர்த்தி
தேவைக்கேற்ப  விடுத்து எடுத்து
பட்டும்படாமல் முன்னகர்ந்து
சிரிப்பில் சமாளித்து
பரிசுத்தமான பிம்பம் பொருத்தி
நீங்கள்
வெற்றி மகுடம் சூடிக் கொண்டீர்கள்.

நானோ
வெறும் பாசம் கொண்டலைந்து
பைத்தியமானேன்.

Monday, November 23, 2009

வேறுபாடு

விரும்பியதெல்லாம்
கிடைத்து விடுகிறது
என்றாவதொரு நாள்.

விரும்பிய போதே
கிடைத்து விடுவதில்
வேறுபடுகிறது
உன் வாழ்க்கையும்
என் வாழ்க்கையும்.

Wednesday, November 18, 2009

சுகித்தல்

இந்த
மண் போல்
மரம் போல்
கிளை போல்
இலை போல்
மலர் போல்
சுகிக்க வேண்டும்
மழையை.

Saturday, October 24, 2009

கலையும் கவிதைகள்

வட்டத்துக்குள் உத்வேகத்துடன்
ஓடத் தொடங்குகிறேன்
எல்லோரும் பயணிக்க
இதோ உருண்டோடும்
என் வாழ்க்கை

சற்று கண்ணயர சாய்ந்தவனை
ஓங்கி முதுகில் அறைந்து
உலுக்கும் யதார்த்தத்தில்
ஏதும்
குறையொன்றுமில்லை
குறையொன்றுமில்லை

என்றாலும்
ஒரு கவிதைக்கான தருணங்கள்
இப்போதெல்லாம்
மிக எளிதாகக் கலைவதில்
சிறிது வருத்தம் தான்

என்றாலும்
அதனால் ஏதும்
குறையொன்றுமில்லை
குறையொன்றுமில்லை.

Wednesday, September 2, 2009

தூக்கம் எனும் வரம்

"நான் தூங்கப்போறேன்பா"
சொன்ன இரண்டாம் நிமிடத்தில்
பூப்போல்
உறங்கிவிடுகிறாள் மனைவி.

ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தவன்
"என்ன இரகசியம்பா"
என்று ஒருநாள் கேட்டேன்.

"மனசை லேசா வச்சுக்கணும்
மண்டைல நிறைய போட்டு குழப்பக்கூடாது
அப்புறம் இதுமாதிரி தூங்கறவங்கள பார்த்து
கண் வைக்கக் கூடாது" என்று சிரித்தாள்.

அன்றைய இரவும்
உலகத்தை எடுத்துக் கொண்டு
என்னிடம் வந்து படுத்தேன்.
ஒரு கட்டத்தில்
மனதை லேசாக வைத்திருப்பதைப் பற்றி
தீவிரமாக விவாதிக்கத் தொடங்கினோம்.

பூப்போல் மனைவி
உறங்கிக் கொண்டிருந்தாள்.

Thursday, August 13, 2009

தடயங்களை அழித்தல்

தினமும் அலுவலகம் செல்லும் வழியில்
இருபுறமும் வரிசையாக கைகோர்த்து
புன்னகைத்து வழியனுப்பும் மரங்களை
சாலை மேம்பாட்டுப் பணிகளின் பேரில்
வெட்டத் தொடங்கியிருந்தார்கள்.

சடசடவென சிலநாட்களில் வீழ்த்தப்பட்டு
வரிசையில் கடைசியாக
ஒரு மரம் மட்டும் தப்பிப் பிழைத்தது.

எஞ்சியிருந்த ஒற்றை மரம்
தாங்கவியாலா தன் இருப்பின் அவஸ்தைகளை
காற்றினில் கவிதைகளாக
ஒரு கொலைக்களத்தின் தடயங்களை
திருச்சபை முன் முறையீடாக
வருவோர் போவோரிடம்
அரற்றிக் கொண்டிருந்தது.

போக்குவரத்து நெரிசலில்
எரிச்சலோடு விரல்கள்
ஹாரனை அழுத்திக் கொண்டிருந்தன.

இளநீர் விற்பவன்
இந்த மரத்திற்கு
இடம் மாறியிருந்தான்.

Friday, June 26, 2009

இந்த நாளில்

விரும்பி வாங்கிய புத்தகம்
வீசி எறிந்ததில் கிழிந்தது

தேடித்தேடி வண்ணம் சேர்த்து
நெடுநேரம் சிரத்தையோடு
வரைந்த ஓவியம்
முடித்ததும் நிறமிழந்து போனது

இருகை விரித்தழைக்கும்
என் பிள்ளையின் மழலைச் சிரிப்பை
எளிதாக நிராகரித்துப் போகிறேன்

மனிதத்தின் தோலுரிந்து தசைகள் முறுக்கி
ஈறு தெரிய என் மிருகம் உறுமுகிறது

உன் துரோகத்தின் நினைவுகளை
சுமந்து நிற்கும் இந்த நாள் முழுதும்
போதனைகள் கடந்து
வன்மம் கொண்டலைகிறது
என் பிரேதம்.

Tuesday, April 28, 2009

பதிவுத் தபாலில் புத்தகம்

பதிவுத் தபாலில் புத்தகம்
வந்து சேர்ந்தது

தடிமனான நூற்கயிற்றால் இறுக்கியதில்
மூச்சுத்திணறி
நாற்புறமும் தடம் பதிந்திருந்தது

கடைசி இருபத்தியேழு பக்கங்கள்
அலட்சியமாக மடங்கி நைந்திருந்தது

ஒரு பக்கத்து அட்டை மழைநீர் இறங்கி
ஈரம் கோர்த்திருந்தது

கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது
எழுதியவனுக்கு எப்படியிருக்குமோ

Tuesday, April 21, 2009

இங்கு வாருங்கள்

பொருள் சார்ந்த உலகத்தின் பல்சக்கரங்களில்
கவலைக்கிடமான வகையில்
வசமாக சிக்கிக் கொண்டீர்கள்

எலும்பு கண்டு பின்னலையும்
நாயொன்று முச்சிரைக்க
உங்களுக்கு அடுத்தபடியாக
ஓடிக்கொண்டிருக்கிறது

எத்தனை தான் சேர்த்தாலும்
இரவெல்லாம் தேடித்துரத்தியும் சிக்காமல்
விடியலுக்கு அருகில்
விழிகளின் இரத்தத் தீற்றலாய்
தினமும் இறக்கும் உங்கள் உறக்கம்

பெட்டிக்குள் இருக்கும் பெட்டிக்குள் இருக்கும் பெட்டிக்குள்
ஒளிந்திருக்கும் வாழ்க்கையென
பணச்சாவி தேடித்தேடி அழிந்தீர்கள்

போதும் இனி இங்கு வாருங்கள்
வாழப் படிக்க வாருங்கள்
உங்கள் குப்பைக்கூடங்களை சுத்தம் செய்து
ஆழ்ந்த தியானத்தின் ஜோதியில் புதுப்பித்து
புலன்களைத் திறந்து
பிரபஞ்சத்தின் உயிர்துடிப்பு
உங்களுக்குள் கேட்கச் செய்கிறோம்

உங்கள் உற்றார் உறவினர்
நண்பர்களுக்கும் சொல்லுங்கள்
இருக்கைக்கு முந்துங்கள்
நான்கு நாள் வகுப்புக் கட்டணம்
வெறும் ஆயிரத்து நானூறு மட்டுமே

/22 Apr 2009

Monday, April 6, 2009

அப்பா வந்திருந்தார்

நேற்று அப்பா வந்திருந்தார்.

இப்போதெல்லாம் குடிப்பதை
நிறுத்திவிட்டதாகவும்
அம்மாவின் காயங்களுக்கு மருந்திட்டபோது
தவிர்க்க முடியாத கண்ணீர்
மன்னிப்பு என்ற சொல்லில்
தெறித்ததையும் சொன்னார்.

கையாடல் செய்த பணத்தை
அலுவலகத்தில் திருப்பி செலுத்திவிட்டதாகவும்
தான் துரோகம் இழைத்த நண்பரொருவரை
நேரில் சந்தித்தது
வருத்தம் தெரிவித்ததையும் சொன்னார்.

நான் பேசிய மேடையிலிருந்து
கடைசி வரிசையில் யாரும் அறியாமல்
நின்று இரசித்ததை சொல்லும் போது
சிறிது கலங்கினார்.

பேரப்பிள்ளைகளின் பெயர்
கேட்டுக் கொண்டார்.
அவர்களுக்கு தான் சொல்ல விரும்பும்
கதைகளைப் பற்றி அவர் ஆரம்பித்த போது
நானும் கேட்கலாமா என்று கேட்டுக்கொண்டே
அவசரத்தில் விழித்து விட்டேன்.

ஒரு நீண்ட பொழுதின் அயர்ச்சிக்குப் பிறகு
மீண்டும் அப்பா வரும் கனவுக்காக
காத்திருக்கத் தொடங்கினேன்.

/6th April, 2009.

Tuesday, January 6, 2009

பலி

ஞானச்செறுக்கேறி சித்தனாய் பித்தனாய்
காடூடே போனவனும்

மேலான பொருள் தேடும் வேட்கையோடு
பேரண்டம் புரட்டிவிடப் புறப்பட்டவனும்

மோகம் வழிந்தோடும் மெல்லிரவில்
சதைப்பிண்டம் குத்தித் தின்று
போதை தலைக்கேறும் உச்சத்தில்
சித்தாந்தக் கூவலோடு சரிந்தவனும்

உண்டு கழித்துறங்கி வேறொன்றும் உணராமல்
மந்தைக்குள் பயமின்றி ஒளிந்திருக்கும் மூர்க்கனும்

மிக உரிமையோடு சிதைக்கக்கூடும்
முன்பொருநாள்
குருவிகள் வந்தமரும் மரக்கிளையில்
அண்ணாந்து ஊஞ்சலாடும்
சின்னப்பெண்ணொருத்தி
சிருஷ்டித்த கனவுகளை.

/6th Jan, 2009

Saturday, October 11, 2008

நவீனனின் சிரிப்பு

பொறி கலங்கி தள்ளாடி
பழுப்பேறிய வேட்டி கலைந்து
குடிச்சி நாலுநாளாச்சு சாமீ
பிச்சை கேட்கும் கிழவனை
எப்படி நான்
கடப்பது அப்பா

அடிக்கொருதரம் முன்னகர்ந்து
இதோ சூழ்ந்து கொண்டது அடர்வனம்
முன்பொருதரம் இப்போது
தொலைந்திருக்கிறேன்
வேறு நினைவில்லை

வேர்பிடித்திருக்கும் கவிதையொன்று
தேடி விரைகிறது
ஆழப்புதைந்திருக்கும்
தன் கண்ணீர் துளிகளை

ஏன் எனக்கு?
ஒன்றிலிருந்து ஒன்றொன்றாய்
சர்வமும் விதி
இட்டதை உண்கிறேன்
அல்லது இயலாமை

என்னையே நான்
திரும்பித் திரும்பி பார்த்து
தேங்கி நிற்பதை
இப்போது நான் பார்க்கிறேன் நவீனா
இனியேனும் கால அம்பை
முன்னோக்கி பாய்ச்ச வேண்டும்

சிரிக்காதே நவீனா
சிரிக்கிறான்.

/12 Oct, 2008.

(பி.கு: சென்ற வாரம் காவ்யா பதிப்பகத்தை தேடிப்பிடித்து நகுலன் புத்தகங்கள் வாங்கினேன். நவீனன் தொற்றிக்கொண்டான் :))

Monday, July 28, 2008

பாமரன் கவிதைகள்

பூ நிலவு இரவென்று
அங்கங்கே தெரிந்தாலும்
முழுவதும் வாசித்தால்
இக்கவிதையில் எதுவுமே புரியவில்லை
என்ன செய்வது என்றான்

புரிந்து கொண்டால்
ஏழாவதுஅறிவின் முதுகுப்புறம்
மயிலிறகால் வருடும் சுகம் கிட்டும்
எதற்கும் ஒற்றைக்காலில் நின்று
உச்சிவேளை சூரியனை
மூன்றுமுறை உற்றுப்பார்த்து
பின் கீழிருந்து மேலாய்
வாசித்துப் பார் என்றேன்

குட்டிச் சுவரில் முட்டுக்கொடுத்து
தலைகீழாய் நின்று படித்தால்
பலன் இருக்குமா என்றான்

அதற்கு வீறல் அருவம்
இருப்பு பூதவுடல்
என்றொரு கவிதை இருக்கிறது
தரட்டுமா என்று கேட்பதற்குள்

ஆளைக் காணோம்.

/28th July, 2008

Friday, July 25, 2008

வன்முறை

எதிர் பெர்த்தில் இருவர் மட்டுமே அமர்ந்திருக்க
காலியிடத்தில் வசதியாக கால்களை நீட்டிக்கொண்டு
இரயில் தொட்டிலில்
மற்றுமொரு கவிதைத் தொகுப்பில் ஆழ்ந்திருந்தேன்
நான்கு பக்கங்கள் கடப்பதற்குள்
துர்நாற்றம் வீசத் தொடங்கியது
சிநேகமில்லாத பார்வையோடு
எதிர்புறம் இருந்தவர்
சாக்ஸ் அணிந்த கால்களை
பதிலுக்கு நீட்டியிருந்தார்

மன்னிக்கவும் எனச்சொல்லி
கால்களை இறக்கிக் கொண்டேன்
இருந்தும் துர்நாற்றம் இறங்க
நேரம் பிடித்தது

/26th July, 2008

Sunday, July 6, 2008

பூங்குடில்வாசியாதல்

பூவிதழ்களால் வேயப்பட்டு நித்தமும்
பூரித்து மலர்வதாயிருக்கிறது
உன் பூங்குடில்.

மிதமான மழைபெய்து விடிந்திருக்கும் பொழுது
இதமாக ஒளியூட்டும் சூரியன்
பிள்ளைகள் விளையாடும் புல்வெளிச்சூழல் -
எளிமையான உன் உலகத்தை
எங்கும் நிறைத்திருக்கும்
உயிர்த்துடிப்பாயொரு புன்னகை.

நானோ இரத்தம் மினுக்கும் காயங்களோடு
இழந்தவன் மொழியின் மூர்க்கம் கொண்டு
நிலமதிர வந்து சேர்கிறேன்.

இரக்கமோ கருணையோ சிதைக்காத
இயல்பான உன் வரவேற்பில்
அதுவரை உணர்ந்திராத தோழைமை தருகிறாய்.
என் சொற்கள் விம்மித்ததும்பும் இருட்டறையின்
சாவியை நான் கண்டுகொள்கிறேன்.

தூரப்பிரதேசங்களின் போர்களக் குறிப்புகளை
சரிவிகிதம் காதல் கலந்து
விறுவிறுப்பாய் சொல்லும் கதைகள்
சலிப்பூட்டுவது குறித்தும்
தானப்பிரபுக்களின் புகழ் மேடைக்கூவல்களில்
நசுங்கும் சில எளியோர் உணர்வுகள் குறித்தும்
பின் பூக்களுக்கும் கவிதைக்குமான
தொடர்பு குறித்தும்
இன்னும் எதைஎதையோ நாம் பேசப்பேச
சாளரங்கள் திறந்த வெளிச்சத்தில்
சகமனிதனாய் உணர்கிறேன்.

விடைபெறும் வேளையில் கவனித்து
உன் பூங்குடிலின் அத்தனை இதழ்களிலும்
இப்போது திரண்டு நிற்பது
கண்ணீர் துளிகளா என்கிறேன்.
பனித்துளிகள் எனச்சொல்லி புன்னகைக்கிறாய்.
பூங்குடில்வாசியாகிப் போகிறேன்.

/6th July, 2008.

Sunday, March 30, 2008

அறிவுரை

"புதுமெட்டியின் உறுத்தல்
பழகி விடும்
தினமும் குங்குமமிட்டு தாலியை
கணவன் காண கண்களில் ஒற்றிக் கொள்
அன்போடிரு பக்தியோடிரு
நிச்சயம் மனதில் இடம் பிடிப்பாய்
பிடிவாதமும் எதிர்வாதமும்
பெண்களுக்கு கூடாது
பொறுத்துப் பொறுத்துப் பூமியாள்
அனுசரித்து நடந்து கொள்"
அவளுக்குச் சொல்கிறார்கள்.

"தொப்பையை குறைங்க மாப்ளே சார்"
அவனுக்குச் சொல்கிறார்கள்.

/30th March, 2008.

Friday, March 21, 2008

வழியனுப்புதல்

இருளடர்ந்த இரவொன்றில்
திருமண சொர்கத்திலிருந்து செங்குத்தாய் கீழிறங்கி
பிறந்தகம் வந்துசேர்ந்த என் செல்ல மகள்
தட்டாதே எனச்சொல்லிவிட்டு
தன்னறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள்.

நான் தொட்டுணர்ந்த அவள் பிஞ்சுப்பாதங்களின்
மென்மையை ஒத்திருந்த கனவுகளை
அங்குதான் அவள் வளர்த்திருந்தாள்.

விழிகள் விரட்டியதில் வெட்கம் தின்ற
தன் முதல் தாவணி
வெண்புரவியில் வீற்றிருக்கும்
இராஜகுமாரனின் வருகைக்கான டைரிப்பக்கங்கள்
சில ஓவியங்கள் பாடல்வரிகளோடு கவிதைத்துண்டுகள்
இவை தவிர்த்து
பிணமொன்று அங்கே கண்டதாய்
அலறிக்கொண்டே வெளியோடி வருபவளை
நெஞ்சோடு தாங்கிக் கொண்டு
இன்னபிற இன்னபிற
நியதிகள் சிக்கல்கள் விளக்கி
வழியனுப்பி வைக்கின்றேன்
வெறும் பிரார்த்தனையோடு.

/21st March, 2008.

Tuesday, October 30, 2007

மழையே மழையே

இந்த மழைக்காலத்திலும்
மின்விசிறி சுழலும் சத்தமில்லாமல்
உறக்கம் வருவதில்லை எனக்கு.

கனத்த போர்வையை சுற்றிக்கொண்டு
தேநீர் சுவைத்தபடியே பார்க்கிறேன்
என் கண்ணாடி ஜன்னல் வெளியே
மெளனமாகப் பெய்கிறது மழை.

இன்னும் வேகமெடுத்து
மரங்கள் ஆடும் மழைத்தாண்டவம்
என் ஜன்னலில் தெறித்த துளிகள்
நெளிந்து வடிகையில் அழகாய் சிதைகிறது.

குளிரும் கதகதப்பும் சேர்ந்த கலவையில்
உற்சாகம் பொங்க
"மழையே மழையே"
என்று நான் தொடங்கும் இக்கவிதையை
ஒழுகும் குடிசையில் நடுங்கும் தன் பிள்ளைகளை
கைகொண்டு பொத்திக் காக்கும்
எவளும் இரசிக்கப் போவதில்லை.

/31st Oct, 2007