Tuesday, January 6, 2009

பலி

ஞானச்செறுக்கேறி சித்தனாய் பித்தனாய்
காடூடே போனவனும்

மேலான பொருள் தேடும் வேட்கையோடு
பேரண்டம் புரட்டிவிடப் புறப்பட்டவனும்

மோகம் வழிந்தோடும் மெல்லிரவில்
சதைப்பிண்டம் குத்தித் தின்று
போதை தலைக்கேறும் உச்சத்தில்
சித்தாந்தக் கூவலோடு சரிந்தவனும்

உண்டு கழித்துறங்கி வேறொன்றும் உணராமல்
மந்தைக்குள் பயமின்றி ஒளிந்திருக்கும் மூர்க்கனும்

மிக உரிமையோடு சிதைக்கக்கூடும்
முன்பொருநாள்
குருவிகள் வந்தமரும் மரக்கிளையில்
அண்ணாந்து ஊஞ்சலாடும்
சின்னப்பெண்ணொருத்தி
சிருஷ்டித்த கனவுகளை.

/6th Jan, 2009

Saturday, October 11, 2008

நவீனனின் சிரிப்பு

பொறி கலங்கி தள்ளாடி
பழுப்பேறிய வேட்டி கலைந்து
குடிச்சி நாலுநாளாச்சு சாமீ
பிச்சை கேட்கும் கிழவனை
எப்படி நான்
கடப்பது அப்பா

அடிக்கொருதரம் முன்னகர்ந்து
இதோ சூழ்ந்து கொண்டது அடர்வனம்
முன்பொருதரம் இப்போது
தொலைந்திருக்கிறேன்
வேறு நினைவில்லை

வேர்பிடித்திருக்கும் கவிதையொன்று
தேடி விரைகிறது
ஆழப்புதைந்திருக்கும்
தன் கண்ணீர் துளிகளை

ஏன் எனக்கு?
ஒன்றிலிருந்து ஒன்றொன்றாய்
சர்வமும் விதி
இட்டதை உண்கிறேன்
அல்லது இயலாமை

என்னையே நான்
திரும்பித் திரும்பி பார்த்து
தேங்கி நிற்பதை
இப்போது நான் பார்க்கிறேன் நவீனா
இனியேனும் கால அம்பை
முன்னோக்கி பாய்ச்ச வேண்டும்

சிரிக்காதே நவீனா
சிரிக்கிறான்.

/12 Oct, 2008.

(பி.கு: சென்ற வாரம் காவ்யா பதிப்பகத்தை தேடிப்பிடித்து நகுலன் புத்தகங்கள் வாங்கினேன். நவீனன் தொற்றிக்கொண்டான் :))

Monday, July 28, 2008

பாமரன் கவிதைகள்

பூ நிலவு இரவென்று
அங்கங்கே தெரிந்தாலும்
முழுவதும் வாசித்தால்
இக்கவிதையில் எதுவுமே புரியவில்லை
என்ன செய்வது என்றான்

புரிந்து கொண்டால்
ஏழாவதுஅறிவின் முதுகுப்புறம்
மயிலிறகால் வருடும் சுகம் கிட்டும்
எதற்கும் ஒற்றைக்காலில் நின்று
உச்சிவேளை சூரியனை
மூன்றுமுறை உற்றுப்பார்த்து
பின் கீழிருந்து மேலாய்
வாசித்துப் பார் என்றேன்

குட்டிச் சுவரில் முட்டுக்கொடுத்து
தலைகீழாய் நின்று படித்தால்
பலன் இருக்குமா என்றான்

அதற்கு வீறல் அருவம்
இருப்பு பூதவுடல்
என்றொரு கவிதை இருக்கிறது
தரட்டுமா என்று கேட்பதற்குள்

ஆளைக் காணோம்.

/28th July, 2008

Friday, July 25, 2008

வன்முறை

எதிர் பெர்த்தில் இருவர் மட்டுமே அமர்ந்திருக்க
காலியிடத்தில் வசதியாக கால்களை நீட்டிக்கொண்டு
இரயில் தொட்டிலில்
மற்றுமொரு கவிதைத் தொகுப்பில் ஆழ்ந்திருந்தேன்
நான்கு பக்கங்கள் கடப்பதற்குள்
துர்நாற்றம் வீசத் தொடங்கியது
சிநேகமில்லாத பார்வையோடு
எதிர்புறம் இருந்தவர்
சாக்ஸ் அணிந்த கால்களை
பதிலுக்கு நீட்டியிருந்தார்

மன்னிக்கவும் எனச்சொல்லி
கால்களை இறக்கிக் கொண்டேன்
இருந்தும் துர்நாற்றம் இறங்க
நேரம் பிடித்தது

/26th July, 2008

Sunday, July 6, 2008

பூங்குடில்வாசியாதல்

பூவிதழ்களால் வேயப்பட்டு நித்தமும்
பூரித்து மலர்வதாயிருக்கிறது
உன் பூங்குடில்.

மிதமான மழைபெய்து விடிந்திருக்கும் பொழுது
இதமாக ஒளியூட்டும் சூரியன்
பிள்ளைகள் விளையாடும் புல்வெளிச்சூழல் -
எளிமையான உன் உலகத்தை
எங்கும் நிறைத்திருக்கும்
உயிர்த்துடிப்பாயொரு புன்னகை.

நானோ இரத்தம் மினுக்கும் காயங்களோடு
இழந்தவன் மொழியின் மூர்க்கம் கொண்டு
நிலமதிர வந்து சேர்கிறேன்.

இரக்கமோ கருணையோ சிதைக்காத
இயல்பான உன் வரவேற்பில்
அதுவரை உணர்ந்திராத தோழைமை தருகிறாய்.
என் சொற்கள் விம்மித்ததும்பும் இருட்டறையின்
சாவியை நான் கண்டுகொள்கிறேன்.

தூரப்பிரதேசங்களின் போர்களக் குறிப்புகளை
சரிவிகிதம் காதல் கலந்து
விறுவிறுப்பாய் சொல்லும் கதைகள்
சலிப்பூட்டுவது குறித்தும்
தானப்பிரபுக்களின் புகழ் மேடைக்கூவல்களில்
நசுங்கும் சில எளியோர் உணர்வுகள் குறித்தும்
பின் பூக்களுக்கும் கவிதைக்குமான
தொடர்பு குறித்தும்
இன்னும் எதைஎதையோ நாம் பேசப்பேச
சாளரங்கள் திறந்த வெளிச்சத்தில்
சகமனிதனாய் உணர்கிறேன்.

விடைபெறும் வேளையில் கவனித்து
உன் பூங்குடிலின் அத்தனை இதழ்களிலும்
இப்போது திரண்டு நிற்பது
கண்ணீர் துளிகளா என்கிறேன்.
பனித்துளிகள் எனச்சொல்லி புன்னகைக்கிறாய்.
பூங்குடில்வாசியாகிப் போகிறேன்.

/6th July, 2008.

Sunday, March 30, 2008

அறிவுரை

"புதுமெட்டியின் உறுத்தல்
பழகி விடும்
தினமும் குங்குமமிட்டு தாலியை
கணவன் காண கண்களில் ஒற்றிக் கொள்
அன்போடிரு பக்தியோடிரு
நிச்சயம் மனதில் இடம் பிடிப்பாய்
பிடிவாதமும் எதிர்வாதமும்
பெண்களுக்கு கூடாது
பொறுத்துப் பொறுத்துப் பூமியாள்
அனுசரித்து நடந்து கொள்"
அவளுக்குச் சொல்கிறார்கள்.

"தொப்பையை குறைங்க மாப்ளே சார்"
அவனுக்குச் சொல்கிறார்கள்.

/30th March, 2008.

Friday, March 21, 2008

வழியனுப்புதல்

இருளடர்ந்த இரவொன்றில்
திருமண சொர்கத்திலிருந்து செங்குத்தாய் கீழிறங்கி
பிறந்தகம் வந்துசேர்ந்த என் செல்ல மகள்
தட்டாதே எனச்சொல்லிவிட்டு
தன்னறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள்.

நான் தொட்டுணர்ந்த அவள் பிஞ்சுப்பாதங்களின்
மென்மையை ஒத்திருந்த கனவுகளை
அங்குதான் அவள் வளர்த்திருந்தாள்.

விழிகள் விரட்டியதில் வெட்கம் தின்ற
தன் முதல் தாவணி
வெண்புரவியில் வீற்றிருக்கும்
இராஜகுமாரனின் வருகைக்கான டைரிப்பக்கங்கள்
சில ஓவியங்கள் பாடல்வரிகளோடு கவிதைத்துண்டுகள்
இவை தவிர்த்து
பிணமொன்று அங்கே கண்டதாய்
அலறிக்கொண்டே வெளியோடி வருபவளை
நெஞ்சோடு தாங்கிக் கொண்டு
இன்னபிற இன்னபிற
நியதிகள் சிக்கல்கள் விளக்கி
வழியனுப்பி வைக்கின்றேன்
வெறும் பிரார்த்தனையோடு.

/21st March, 2008.

Tuesday, October 30, 2007

மழையே மழையே

இந்த மழைக்காலத்திலும்
மின்விசிறி சுழலும் சத்தமில்லாமல்
உறக்கம் வருவதில்லை எனக்கு.

கனத்த போர்வையை சுற்றிக்கொண்டு
தேநீர் சுவைத்தபடியே பார்க்கிறேன்
என் கண்ணாடி ஜன்னல் வெளியே
மெளனமாகப் பெய்கிறது மழை.

இன்னும் வேகமெடுத்து
மரங்கள் ஆடும் மழைத்தாண்டவம்
என் ஜன்னலில் தெறித்த துளிகள்
நெளிந்து வடிகையில் அழகாய் சிதைகிறது.

குளிரும் கதகதப்பும் சேர்ந்த கலவையில்
உற்சாகம் பொங்க
"மழையே மழையே"
என்று நான் தொடங்கும் இக்கவிதையை
ஒழுகும் குடிசையில் நடுங்கும் தன் பிள்ளைகளை
கைகொண்டு பொத்திக் காக்கும்
எவளும் இரசிக்கப் போவதில்லை.

/31st Oct, 2007

Wednesday, July 11, 2007

உளுந்துருண்டை

எங்கோவோர் இடுக்கில் சிறுதுகளாக ஒட்டிக்கொண்டோ
காற்றினில் இந்த இறகைப் போல் மிதந்துகொண்டோ
அல்லது எதனுள்ளோ பொதிந்திருந்து
எப்போதும் சுருங்கி விரிந்து
துடித்துக் கொண்டே இருக்கிறதா
இந்தப் பிரபஞ்சம் ?

இருளோ ஒளியோ இடமோ காலமோ
இதற்குள் மட்டும் தான் பொருள்படுமா ?
எனின் பிரபஞ்சம் இல்லாத பெருவெளியில்
என்ன இருக்கும் ?

யாரிடம் யார்
கெஞ்சிக் கூத்தாடி கேட்டதின்பேரில்
இப்படிக் கிறுகிறுத்துச் சுழல்கின்றன
இத்தனை கிரகங்கள் ?

எதையுமே இலட்சியம் செய்யாமல்
திமிறும் இதன் காலவெள்ளத்தில்
குதூகலித்து கூப்பாடு போட்டு - பின்
கரையொதுங்கி நாறும் சடலமாக
ஏன் இத்தனை உயிர்கள் ?

ஒன்றுமே பேசத் தோன்றவில்லை.

கையிலிருந்த உளுந்துருண்டையில்
ஊர்ந்து சென்ற எறும்புகளை ஊதித் தள்ளிவிட்டு
ஒரே விழுங்களில் சில கிரகங்களைத் தின்று செரித்தபடியே
உறங்கிப் போனேன்.

/11th July, 2007

Saturday, July 7, 2007

மந்தை

மந்தையில் சேர்ந்திடாமல் இருப்பதிலே
எப்போதும் குவிந்திருக்கிறது
என் மொத்த கவனமும்.

உங்களுக்கு சிறிது கூட
வெட்கமே இல்லையா மந்தைகளே
என்பது போன்ற ஞானத்தின் கேள்விகளை
கொழுந்து விட்டெரியும் தீப்பந்தாய் உருட்டி
குறிபார்த்து எறிந்தாகிவிட்டது.

மார்தட்டி முழக்கமிட்டு
எதிர்வைத்த வாதங்களை ஒரு கைபார்த்ததில்
என் பேனா முனையில் இரத்தம் தோய்ந்தது.

இயல்பில் கால்சுற்றும் தளைகளை
சீ அற்பங்களே எனக் கட்டறுத்து
வெகுதூரம் விலகி ஓடியதில்
தற்சமயம் எங்கிருக்கிறேன் என்பதே
தெரியாமல் கேட்டபோது
நிசப்தம் இருளேற்றுமொரு பின்னிரவில் -
மந்தையில் சேர்ந்திடாத மந்தை
என்ற பதில் வருகிறது.

/7th July, 2007

Saturday, June 16, 2007

கால ஓட்டம்

தலைதெறிக்க ஓடிவந்து
என் நிகழ்கால அறையின்
கதவு ஜன்னல்களை
கலவரத்தோடு தாளிட்டுக் கொண்டு
வியர்வை வழிய
சாய்ந்து அமர்கின்றேன்.

சற்றும் பாதுகாப்பாய் உணர்வதற்குள்
இருளாய் அறையெங்கும் வியாப்பித்து
இரை கண்ட மிருகம் போல்
என்னை உற்றுப் பார்க்கிறது
இன்னும் இறந்து போகாத
இறக்க மறுக்கும்
இறந்த காலம்.

/16th June, 2007

Friday, June 8, 2007

அந்திமக் காலம்

கண்கள் சிவந்து விரல்நுனி நடுங்க
நரம்புகள் முறுக்கேறி எதற்கெடுத்தாலும்
நீ பற்களை நறநறக்கும் ஓசைக்கு
இன்னமும் பழகாமல்
கூசிப் போகின்றன என் செவிகள்.

எச்சில் ஒழுகும் வேட்கையோடு
போதையில் குழறிக்கொஞ்சி
வெறிகொண்டு என் மேற்படரும் உன் மோகத்தில்
அழுத்தும் தாலிக்கயிற்றை
அதிகவலியோடு உணர்கின்றேன்.

வீட்டின் நாற்சுவர்களுக்குள்
பரந்து விரிந்த உன் வெற்று இராஜியத்தில்
அடிமை என் குரல் எழும்ப
'நான் ஆம்பளைடி' என விழும் அறைக்கு
மரத்துவிட்டன என் மனதும் உடலும்.

இருள்கசியும் உன் பிம்பம் பார்த்து
இதழ்பிதுக்கி கண்கள் மருண்டு என் மடிசாய்ந்து
'நானும் அப்பா மாதிரி ஆம்பளையாம்மா ?'
எனக்குழம்பியழும் நம் பிள்ளையின் சுடுகண்ணீர்
உன் அந்திமக்காலத்தில் உனக்குப் புரியலாம்.

/8th June, 2007

Friday, April 20, 2007

ஆசிரியப்பா

{ ஒரு ஆசிரியர் தினவிழாவிற்காக கவியரங்கம் பாணியில் நான் கல்லூரியில் எழுதி வாசித்த கவிதை. பாரதியோடு பரிச்சயம் உள்ளவர்களுக்கு இது "கண்ணன் என் சீடன்" கவிதையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது தெரியும். இந்த "சின்ன" கவிதையை எல்லோரும் கொட்டாவி விட்டு இரசித்து, நான் வாசித்து முடித்ததும் "அப்பாடா" என்று கைத்தட்டினார்கள் :) கவிதையை சரியான audience-இடம் கொண்டு செல்லாவிட்டால் அது காமெடியாகி விடும் என்ற அனுபவம் பெற்றதாய் ஞாபகம் :) }

=================
ஆசிரியப்பா
=================
முன்னைச் சிலதிங்களாய் முடிவிலாதுயரெய்தி
சிந்தைமிக நொந்திட்டேன்; செய்வதறியா துறைந்திட்டேன்
தொல்லைதரு விசித்திரங்களெல்லாம் எல்லையிலா
வடிவிலே வந்தென்னைவாட்டிட உள்ளம்மிக உளைந்திட்டேன்
நான்பட்ட பாட்டையெல்லாம் பாட்டாகயெழுதிவைக்கப்
பலநூறு பக்கங்கள் போதாது போதாது
அன்னவையாவினுக்கும் ஆதிமூலகாரணமாயானவன்
ஒரு சின்னவன், சிறியன் - என் சீடன்.

பிள்ளைமுகங்காட்டி கிள்ளைமொழியெல்லாம் பேசிடுவான்
சாந்தஸ்வரூபியாய் சாதுவாய்
சொன்னதெற்கெல்லாம் தட்டாமல் தலையசைப்பான்
ஆனாலுமையா அவனை நம்பாதீர்
என் சீடனால் எனக்கு நிகழ்ந்ததையெல்லாம்
நாடறிய உரைக்கின்றேன் நல்ல செவி தாரீரோ !

முற்றாத இளங்காலைப் பொழுதினிலே
கற்றால் அஃதுங்கள் காலடியில் சீடனாயிருந்தே
என்றவன் சொல்லக் கேட்டு
உற்றேன் உளமெல்லாம் பூரிப்பும் பெருமிதமும்.
மூர்த்தியிவன் சிறியவன்தான் ஆனாலும் பெருங்
கீர்த்தியெய்தி புகழெய்தி என்பெயர் காப்பான் என்றெண்ணி
சீடனாய் அவனிருக்கச் சம்மதித்தேன்
பெருந்துயரை நானே தான் வரவழைத்தேன்.

முதற்சில தினங்களெல்லாம் அவன்பால் அகப்பற்று மிகக்கொண்டு
வேதாந்த ஞானமெல்லாம் விருப்புடனே ஓதலானேன்
அவனும் விழிப்புடனே கேட்டிருந்தான் - ஆனால்
வெறுமனே கேட்டிருந்தானேயொழிய
ஓர்முறையேனும் எதிர்க்கேள்வி கேட்டானில்லை.
ஓகோ, பெரியோர்மேல் மிக்க மரியாதைபோலும்
என்றெண்ணி மகிழ்ந்து அவனோடு
இணக்கம் வளர்க்க விரும்பி -
"மகனே இன்றனை உனக்கு நான் ஓதியவற்றுள்
எங்கேனும் ஐயம் இருந்திட்டால்
இக்கணமே இயம்பிடுவாய் -
தெளிவு செய்வேன்" என்றேன்.
அவனோ தீப்பட்டவன் போல் திடுக்கிட்டெழுந்து
"உள்ளேன் ஐயா" என உரைத்தமர்ந்திட்டான்.
என் உள்ளம்பட்ட உளைச்சல் சொல்லிமாளாது.

இமைப்போதும் சோராமல் உறங்குகிறான்
இமையிரண்டும் மூடாமலும் உறங்குகிறான்
ஊரே ஒன்றுகூடி உற்றுநோக்கிட்டாலும்
கள்ளன் அவன் கண்ணுறக்கம் எந்தவகை
கண்டுசொல்ல இயலாது - நானும்
சின்னஞ்சிறு பாலகன் தானே சிறுவன் தானே
சீடன் இவனை சீர்செய்ய எண்ணுங்கால்
சினங்கொள்ளல் கூடாது எனக்கருதி
இன்னும் பலவும் முயற்சித்தேன் - அவனோ
கணவன் சொல்லினுக்கெல்லாம் எதிர்செய்யும் மனைவிபோல்
நான் சொன்னதெற்கெல்லாம் நேரெதிராய் நடந்திட்டான்.

இறுதியாய் ஓர்முறை முயற்சித்து விடுவது என்றெண்ணி
அவனையருகினில் அழைத்து -
"உள்ளும் புறமும் ஒன்றெய்தி நான் சொல்லும் பாடங்களில் உன்
கண்ணும் கருத்தும் காதும் வைத்திடுவாய்
மூத்தோர் சொல் மதிசேர்ப்பாய்
மாதா பிதா குரு தெய்வம் அறிவாயப்பா" என்றேன்.
பதிலுக்கு துடுக்குடன் அவன் வெடுக்கென்றுரைகிறான் -
"ஐயா நீர் சொன்ன வரிசையிலே
நான்காமன் தான் எனையறிந்த நாயகன்.
தேங்காய் பூ பழம் தேர்வோடு
எப்போது நான் போனாலும்
எதிர்கேள்வியின்றி அருட்புரிவான்.
அவனிடத்து நீர் சீடனாய் அமைகுவீரே!!"
என்றவன் சொல்லக் கேட்டு
எண்ணற்ற எரிமலைகள் வெடித்தென்னுள்.
கண்கள் சிவந்து இதழ்கள் துடித்திட
"சீடனே சிறிய மூடனே
காடனே கபட வேடனே
இனியென் முகத்தில்
விழித்திடா தொழிந்து போ"
என வெடித்திட்டேன்.

மறுகணம்
வானமிருண்டது; பூமி அதிர்ந்தது;
மின்னல் கிழிந்தது; இடி முழங்கியது;
விண்ணுக்கும் மண்ணுக்குமாயோர்
ஜோதிப் பிழம்பு தோன்றியது - அதிலே
ஆதியாய் அந்தமாய் மூலமாய் மூர்த்தியாய்
நின்று நகைத்திட்டான் -
மாயக் கண்ணன்.

"கண்ணா,
சீடனாய் வந்து இந்த சிற்றுயிரை
குறையுயிராய் வதைத்திட்ட
கோலமேனப்பா ?" எனக் கேட்டேன்.
"மகனே,
இதற்கெல்லாம் நீ சோர்ந்திடல் வேண்டா !
எமைவிடப் பொல்லாத கண்ணன்கள்
புவியெங்கும் சீடராய் நிறைந்திருப்பர்.
இதற்கொண்ட அனுபவத்தால்
அவர்களையெல்லாம் சமாளிக்க முயற்சிப்பாய் -
அதற்குமேல் ஆண்டவன் சித்தம் !!"
எனச் சொல்லி மறைந்திட்டான் மாயக்கண்ணன்.
திகைத்திட்டேன் நான் !!!

/Sep, 2000

Wednesday, April 4, 2007

எ.பி.சு.ரா.க - 6

ஒரு கவிதையை எப்போது நமக்குப் பிடிக்கின்றது ? நாம் உணர்ந்ததையே அது அழகான வார்த்தைகளில் விளக்கிச் சொல்லி நம்மோடு தோழைமை பாராட்டும்போதா ? நாம் இதுவரை அறிந்திராத ஒன்றை அது உணரத்தரும்போதா ? இல்லை சதா நம்முள் அழுத்திக் கொண்டிருந்தாலும் என்னவென்றே நம்மால் இனம் காணமுடியாத ஒன்றை இது தான் அது என்று உருவம் தந்து நம்முன் நிறுத்தும்போதா ? ஏதோ காரணத்தினால் சுந்தர ராமசாமியின் உருக்கமான, தலைப்பில்லாத இக்கவிதை மனதைத் தொட்டது.

~~~~~~~~
என் துக்கத்திற்கு விடுமுறை இல்லை என்பதறிவேன்
இருப்பினும் அது சற்றுத் தூங்கினால்
நானும் சற்றுத் தூங்க முடியும்
அதன் விழிப்பு என்னை வதைக்கிறது
சற்று விட்டுப் பிடி என்று சொல்லவும் எனக்குத் தெரியவில்லை
இருந்தாலும் இப்போதும் சிரிக்க முயல்கிறேன்

என் துக்கத்திற்கு விடுமுறை இல்லையென்பதை உணர்ந்துவிட்டேன்
இருந்தாலும் அது சற்று ஓய்வெடுத்துக் கொண்டால்
அந்நேரம் நானும் ஓய்வெடுத்துக்கொள்ள முடியும்
தூங்கினால் நானும் தூங்க முடியும்
இருப்பினும் சிரிக்க முயல்கிறேன்
சில சமயம் வெளியே போகிறேன்
இனம்கூற முடியாத ஏதோ ஒன்று நெற்றிப்பொட்டை
சதா தாக்கிக்கொண்டிருக்கிறது
சுமை களைந்து நிற்க மனம் ஏங்குகிறது
மாலையில் சூரியன் மறையும்போது
தனி அறையில் அமர்ந்திருக்கிறேன்
இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்கிறேன்
என்னைத் தவிர இங்கு வேறு எவருமில்லை
எனச் சொல்லிச் சிரிக்கிறது துக்கம்.
- சுந்தர ராமசாமி, 24.1.1995
~~~~~~~~~

Monday, April 2, 2007

எ.பி.சு.ரா.க - 5

சுந்தர ராமசாமியின் இக்கவிதையைப் படிக்கும் போதெல்லாம் மனதும் உடலும் பறக்கத் துடிக்கின்றன.

=================
பறக்கத் துடி
=================
இன்னுமா நீ பறக்கவில்லை ?
விரித்த சிறகுகளும்
தணிந்த முன்னுடலும்
தொட்டும் தொடாமல்
மேலெழுந்து நிற்கும் கால்களுமாய்
உன்னை வடித்திருக்கும்
அந்தச் சிற்பியின் அந்தரங்கம்
இன்னுமா உனக்கு எட்டவில்லை ?
நீ அமர்ந்திருக்கும் அந்தக் கல்தூண்முன்
அகன்ற முற்றத்தில்
காலம் காலமாய் வந்திறங்கி
தம் அசைவுகளிலும் நளினங்களிலும்
சோபைகளை வாரியிறைக்கும்
புறாக்களின் சுதந்திரத்தைக்
கண்ணாரக் கண்ட பின்னுமா
சிறகை விரித்து
பாதம் உயர்த்தி
பறக்கத் தயங்கி
நின்று கொண்டிருக்கிறாய் ?

சிறிது சிந்தித்துப் பார்
உன் இனம்போல் நீயும்
வானத்தில் வட்டமிட வேண்டாமா ?
உனக்கும் தான் இருக்கின்றன
அவைபோல் சிறகுகள்
உடற்கட்டில் துல்லியம்
இதைவிடவா கூடும்.
உயிரா ?
உள்துடிப்பில் இருந்துதானே பற்றிற்று
உயிரின் பொறி
கல்தானே கனலாயிற்று
பறக்கத் துடி
துடி துடி துடி
பற்றும் உயிர்.
- சுந்தர ராமசாமி, நவம்பர் 1993

Sunday, March 25, 2007

உறுதியானது

நீண்டுகொண்டே செல்லும் இத்தூரத்தை
இதோ இதோ எனத்தேற்றி
இனியும் கடக்க முடியாது

துவண்டு மீண்டும் துவண்டு
தன்னைத் தானே இடறிக்கொள்ளும் கால்கள்
இனியும் என்னை எங்கும் கொண்டு சேர்க்காது

தசைகள் கிழித்து இறுக்கக் கட்டிய கட்டவிழ்ந்து
திசைக்கொன்றாய் தெறித்து ஓட
என்னில் எதுவும் மிச்சமில்லை

அடுத்த அடி நான் எடுத்து வைப்பதென்றால்
நான் பற்றிக்கொள்ள ஒரு பிடியைத் தருவாய்
எனைத் தேற்றியெடுத்து தாங்கிக் கொள்ள
நீ படைத்ததிலே எது உறுதியானதோ
அதை எனக்குத் தருவாய் எனக் கேட்டேன்

பூக்களிலே மெல்லிய பூ இது தான்
இனி இது உன் பொறுப்பு எனத் தந்து
அர்த்தத்தோடு சிரித்துப் போகிறான்

/25th March, 2007

Thursday, March 22, 2007

வெற்றிடம்

எதுவுமே இல்லையென்றாலும்
எதுவுமாகவும் இருக்கலாம் என்பதால்
சாத்தியங்களால் நிறைந்திருக்கும் வெற்றிடத்தில்
இது தான் எனவொன்று வந்த பின்னும்
முகம்வாடி வெளியேறிப்போகும்
அதுவல்லாத அனைத்திற்காகவும்
ஏங்கித் தவித்து தூக்கம் கெட்டவன்
இதுவென்றதும் இல்லாதாகி
எதுவுமே என்றுமே இருக்க முடியாத
வெற்றிடங்களால் நிறைந்த வெற்றிடத்தில்
ஐயோ பாவம் தொலைந்து போனான்.

/22nd March, 2007

Saturday, March 17, 2007

கண்ணுக்குத் தெரியாத மேடை

எல்லா சுதந்திரதினத்திற்கும்
தவறாமல் மேடையேறி
ஆனந்த சுதந்திரம் அடைந்த மகிழ்ச்சியில்
குறுகுறுக்கும் ஒட்டுமீசையை
கம்பீரமாக முறுக்கிக் கொள்வான்
என் பள்ளி பாரதி.

மைதீட்டி திலகமிட்டு அக்காவின் கொலுசணிந்து
'தீராத விளையாட்டுப் பிள்ளை' பாடி
நேற்று பழகிய வெட்கத்தோடு
பார்வையாளர் கூட்டத்தில் தன் கண்ணனைத் தேடி
எப்படியும் பரிசோடு தான் திரும்புவாள்
என் சின்ன இராதை.

குச்சிக் கைகளில் அட்டை வாள்சுழற்றி
தன் புஜபல பராக்கிரமங்கள் பேசி
நடிகர் திலகத்து பெருமூச்சுவிட்டு
நாடக முடிவினில் மனம்திருந்தி
கைத்தட்டல் வாங்குவான்
என் முரட்டு மன்னன்.

இன்றோ கண்ணுக்குத் தெரியாத மேடைகளில்
யாரும் காணக் கலைந்திடாமல்
நேர்த்தியாய் போடும் பல வேடங்கள்
அன்று போல் இல்லாமல்
வெறும் உறுத்தல்களையே
பரிசாகத் தருகின்றன.

/17th March, 2007.

Wednesday, March 14, 2007

உங்களுடைய நான்

நீண்டநாள் பயணத்தில்
என்னோடு எனக்கு
மிக நெருக்கமான பழக்கம்.

என்னைப் போலவே என்னை அறிந்து கொள்ள
என்னோடு பயணிக்கும் தேவைகள்
என்றுமே உங்களுக்கு இருந்ததில்லை என்றாலும்
ஆளுக்கொரு விதமாய் அலங்கரித்து
என்னை என்முன் நீங்கள் நிறுத்தும் போது
'அது நான் அல்ல, நீங்கள் தான்' என்று
நான் விழுந்து சிரிக்காமல் சொன்னாலும்
கோபம் வருகிறது உங்களுக்கு.

சரி போகட்டும்
நீங்கள் அறியாத என்னை
நான் விளக்கிச் சொல்லவா என்றால்
நான் அறியும் என்னைவிட
நீங்கள் அறியும் நான்
உங்களுக்குச் சரியாக இருப்பதே
எனக்கு நல்லது என்ற அறிவுரை சொல்லி
புறப்பட்டு விடுகிறீர்கள்.

என்னோடு என் பயணம் தொடர்கிறது
நீங்கள் இல்லாமலே.

/14th March, 2007

Thursday, March 1, 2007

பூக்களை நேசித்தவன் கதை

தன் தாயின் உள்ளங்கைப் பற்றுதலில்
தான் பெற்ற அன்பும் அமைதியும்
பூக்களில் நிறைந்து நின்று
நித்தமும் சிரிக்கக் கண்டு
பூக்களோடு அவன்
தீராத காதல் கொண்டான்.

மனத்தின் வெளிப்பிரவாகமோ
ஆழ்ந்த உள்இடுக்குகளோ
பூக்கள் வேண்டாத இடமே இல்லையென்று
பூமியே பூத்துக் குலுங்க எண்ணி
தன் வீட்டுத் தோட்டத்திலிருந்து
அவன் தொடங்கினான்.

பூக்களின் இதழெங்கும் கவிகள் எழுதி
பூமணத்தில் காற்றோடு கலக்க விட்டான்.

இன்னொரு நாளுக்கான நம்பிக்கை
பூக்களில் மட்டுமே ஒளிந்திருக்கக் கண்டு
பரவசமடைந்த அதே வேளையில் தான்
பூக்களைக் கிழித்துக் குதறி
தின்றுயிர்க்கும் பிராணிகளும்
உண்டென்பதை அவன் அறிந்தான்.

தன் பூக்களைக் காத்துக் கொள்ள
வெறிகொண்டு பிராணிகள் பின்னே
விரட்டிச் சோர்ந்துடைந்து
கண்ணீர் விட்டான்.

பூக்களோடு வாழ நினைத்தவன் அன்றுமுதல்
முட்களைச் சிந்திப்பதிலே
முட்களைச் சேகரிப்பதிலே
வாழ்வைத் தொலைத்துவொரு
முள்வேலி செய்து முடித்து
மாண்டு போனான்.

அவன் செய்த வேலிக்குள் யாரேனும்
இனி பாதுகாப்பாய் பூக்கள் வளர்க்கலாம்.
அன்று பூத்துச் சிரிக்கும் பூக்களிலும்
அவன் எழுதிய கவிகள் இருக்கலாம்.

/1st March, 2007